கனவில் கூட நடக்கக்கூடாது.. கோவையில் குழந்தை பிறந்ததை கொண்டாடச் சென்ற போது தந்தைக்கு சோகம்
கோவை: கோவை பூலுவபட்டி அருகே குழந்தை பிறந்ததை கொண்டாடச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தையடுத்து நண்பர்களுடன் மது அருந்தச் சென்ற பரணிதரன் என்கிற தூய்மை பணியாளர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இன்றைய சூழலில் பலர் கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது என்கிற நிலைக்கு மாறிவிட்டார்கள். நண்பர்களுடன் சென்று மலைப்பகுதிகளில், காடுகளில் மது அருந்துவது தான் சந்தோஷம் என்கிற மனநிலைக்கு பலர் மாறியிருக்கிறார்கள். ஏரிகள், அருவிகள், குளங்கள், அடர்ந்த காடுகளில் திரும்பிய பக்கம் எல்லாம் மதுபாட்டில்கள் அதிகமாக இருக்கிறது.

மது அருந்தும் பழக்கம், மது அருந்துவோரை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தையும் சீரழிக்கிறது. ஆனால் பலர் மதுபழக்கத்தை விட தயாராக இல்லை. கோவை பகுதியில் ஒருவர் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை கொண்டாடச் சென்ற போது உயிழந்தார்.
கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த 24 வயதாகும் பரணிதரனின் மனைவிக்கு நேற்று முன்தினம் 2வது குழந்தை பிறந்துள்ளது. அதனை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பரணிதரன் மது அருந்தச் சென்றுள்ளார். இந்நிலையில, தோட்டத்தில் பராமரிப்பின்றி கிடந்த கிணற்றில் தவறி விழுந்து பரணிதரன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கோவை பூலுவபட்டி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை என்கிற கிராமத்தில் மதுபோதை தலைக்கேறியதில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். சிவராஜ்பேட்டை தனக்கோடி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர், தனது நண்பரான வெங்கடேசன் என்பவருடன் கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதை அதிகமானதால் வெங்கடேசன், ஸ்ரீதரை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதர் இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில், கிணற்றில் அவரது சடலம் மிதந்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், வெங்கடேசனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உயிரிழந்த ஸ்ரீதரின் மகன்கள் வெங்கடேசனை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிணறு அருகே அல்லது ஆறு, குளம், போன்ற நீர் நிலைப்பகுதிகளில் மது அருந்துவது ஆபத்தானது ஆகும். அப்படி செய்தால் விபரீதம் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications