பெரியார் சிலை அவமதிப்பு.. கோவை போலீசில் பாரத் சேனா அமைப்பு நிர்வாகி அருண், சரண்! தீவிர விசாரணை
கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாரத் சேனா என்ற அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Recommended Video
கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழம்பெரும் சிலைகளில் ஒன்று இதுவாகும். பெரியார் இயக்கங்களின் போராட்டங்கள், சிந்தனை நிகழ்வுகள் போன்றவை இங்கு வைத்து நடைபெறுவது வழக்கம்.
சமீப காலமாக, பெரியாரிய இயக்கத்தினர், மற்றும் வலதுசாரி இயக்கத்தினரிடையே, இப்பகுதியில் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்துள்ளது.
எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்...அதனால் அவர் பெரியார்... ஸ்டாலின் பதிவு!!
போராட்டம்
இந்த நிலையில், இன்று காலை திடீரென பெரியார் சிலை மீது யாரோ சிலர் காவி சாயத்தைப் பூசி விட்டு சென்றுள்ளனர். இதை அறிந்ததும் பெரியார் அமைப்பினர் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். காவி சாயம் பூசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
தலைவர்கள் கண்டனம்
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுகவின் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் எச்சரிக்கை
ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவை, போத்தனூர், காவல் நிலையத்தில் அருண் கிருஷ்ணன் என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக சரணடைந்துள்ளார்.
பாரத் சேனா அமைப்பு
சரணடைந்த நபர், பாரத் சேனா என்ற அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் என்று தெரியவந்துள்ளது. போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவராம் இவர். எதற்காக பெரியார் சிலை மீது காவி சாயம் பூசினார், என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.