திருப்பி அடிச்சா.. கோவையில் செந்தில் பாலாஜிக்காக அப்படி ஒரு போஸ்டர்.. அதிர வைத்த திமுக!
கோவை : கோவை லங்கா கார்னர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க என்று அந்த போஸ்டரில் இருக்கிறது.
கரூர் தொகுதி எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, 2021ல் நடந்த தேர்தலில் தனது மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற வைத்தார். அதேநேரம் திமுக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. கோவை மாவட்டம் மட்டுமல்ல, கொங்கு மண்டலத்திலேயே பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம் அதிமுக கணிசமான இடங்களில் வென்றது. பாஜக இரண்டு இடங்களில் வென்று இருந்தது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டத்தில் மொத்தமாக வெற்றி பெற்றிருந்தது திமுக. கரூர் மாவட்டத்தில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தோற்கடிக்கப்பட்டிருந்தார். கரூர் மாவட்டத்தில் மொத்தமாக திமுக ஜெயிக்க செந்தில் பாலாஜி தான் காணம் என்பதால் அவருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.அதுவும் சாதாரண பொறுப்பு அல்ல.. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், மின்சாரத்துறையும் கொடுத்தார். இந்த இரண்டுமே பவர்புல் துறைகள் ஆகும்.

அத்துடன் முதல்வர் ஸ்டாலின் நிற்கவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற விரும்பினார். அதற்கு கோவை மாநகர பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார். செந்தில் பாலாஜி, ஸ்டாலினின் நம்பிக்கையை காப்பாற்றினார். சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற போதிலும்,உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. செந்தில் பாலாஜியின் அதிரடி வியூகத்தால் கொங்கு மண்டலம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் திமுகவே வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை வெல்ல விரும்பிய ஸ்டாலின், செந்தில் பாலாஜியைத்தான் அதற்கும் வியூகம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு பாதகமாக அமைந்ததது. 2015ம் ஆண்டு வேலை வாங்கித்தருவதாக எழுந்த மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என்றும், பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கைகளை தொடரலாம் என்று அறிவித்தது.
இதையடுத்து வருமானவரித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை முடிவில் விசாரணை நடத்திய அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் அவரதுஉடல் நிலையை பரிசோதிக்க வரப்போகிறார்கள்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆக்ரோசமாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசும் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை!
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியதுடன். முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசிய வீடியோவை குறிப்பிட்டதுடன், அந்த வீடியோவில் "எங்களை யாரும் அடிக்க முடியாது. நான் திருப்பி அடிச்சா தாங்க முடியாது" என்று கருணாநிதி பேசியதை, ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் நேரடியாகவே பாஜகவை எச்சரித்தார். எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியிருந்த, "எங்களை யாரும் அடிக்க முடியாது. நான் திருப்பி அடிச்சா தாங்க முடியாது" என்ற வசனத்தை பேனராக கோவையில் வைத்துள்ளார்கள். கோவை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள லங்கா கார்னர் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்கிருந்து திருச்சி சாலை, அவினாசி சாலை, டவுன்ஹால் உட்பட கோவையின் பல்வேறு இடங்களுக்கும் செல்ல முடியும். அங்குதான் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக போஸ்டர்களை ஓட்டியுள்ளார்கள். இந்த போஸ்டர் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications