சொத்து வரி.. கோவை மக்களுக்கு சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் குட்நியூஸ்.. சனி, ஞாயிறு மறந்துடாதீங்க
கோவை: கோவையில் சொத்து வரி செலுத்த சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

2023-24ம் நிதியாண்டுக்கு சொத்து வரியாக ரூ.378.71 கோடி, நிலுவை வரி ரூ.140.65 கோடி சேர்த்து மொத்தம் ரூ.519.36 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டு கணக்கில் ரூ.346 கோடி, நிலுவை கணக்கில் ரூ.64.48 கோடி என, 410.48 கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் சொத்து வரி வசூலில், 93.49 சதவீதம் வசூலித்து, தமிழக அளவில் கோவை மாநகராட்சி கடந்த நிதியாண்டில் முதலிடத்தை பெற்றிருந்தது. இந்த நிதியாண்டில் 2 வது அரையாண்டிற்கான சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களை செலுத்த சிறப்பு முகாம்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "2023-2024 -ம் நிதியாண்டின் 2-ம் அரையாண்டு வரையிலான, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களை செலுத்த, மக்களின் வசதிக்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி மேற்கு மண்டலத்தில் 35-வது வார்டு லட்சுமி நகர், இடையர்பாளையம் அண்ணா நகர் செக்போஸ்ட் எதிர்புறம் விநாயகர் கோவில் வளாகம், 42-வது வார்டு கோவில்மேடு வளாகம், 74-வது வார்டு நாயக்கர் தோட்டம் சமுதாயக் கூடம், 33-வது வார்டு எஸ்.கே.ஆர்.நகர் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.மேலும் கிழக்கு மண்டலத்தில் 7 மற்றும் 8-வது வார்டுகளில் நேரு நகர் கிழக்கு, 24-வது வார்டு குருசாமி நகர், 56-வது வார்டு ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம், 57-வது வார்டு நெசவாளர் காலனி.
தெற்கு மண்டலத்தில் 97-வது வார்டு பிள்ளையார்புரம், 100-வது வார்டு மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு மண்டலத்தில் 15-வது வார்டு சுப்ரமணியம்பாளையம் அங்கன் வாடி மையம், 19-வது வார்டு மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், 25-வது வார்டு காந்திமாநகர் அரசு ஆரம்பப் பள்ளி.
மத்திய மண்டலத்தில் 32-வது வார்டு, நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா, 62-வது வார்டு பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80-வது வார்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84-வது வார்டு, ஜி.எம்.நகரில் உள்ள தர்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications