எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. 'குழந்தைங்க முன்னாடியே'.. கோவை மேயர் குறித்து கதறும் பெண்
கோவை: கோவை மேயர் கல்பனா குடும்பத்தால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண்யா என்ற பெண் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்து சரண்யா விளக்கமும் அளித்துள்ளார்.
கோவை துடியலூர் அருகே மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டனில் வசிக்கும் 33 வயதாகும் சரண்யா. இவரது கணவர் கோபிநாத். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டரை ஆண்டுகளாக நட்சத்திரா கார்டனில் வீட்டில் வாடகைக்கு வசிக்கின்றனர்.

நட்சத்திரா கார்டனில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளது. இதில் முன்புற வீட்டில், கோபிநாத்-சரண்யா தம்பதி வசிக்கிறார்கள். பின் வீட்டில், கோவை மேயர் கல்பனாவின் தாய் காளியம்மாள் மற்றும் மேயரின் தம்பி குமார் வசிக்கிறார்கள். கல்பனா மேயராவதற்கு முன், காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்காக, கோபிநாத்திடம் குமார் 15,000 ரூபாய் வாங்கியதாகவும், அதில் அதில் 5,000 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், 10,000 ரூபாயை கொடுப்பதற்கு முன், அவரது அக்கா கல்பனா, கோவை மேயராகி விட்டார். கொடுத்த பணத்தை குமாரிடம், கோபிநாத் கேட்ட போது, திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரண்யா தன்னை வீட்டை விட்டு வெளியேற வைக்க கல்பனா குடும்பத்தினர் முயற்சிப்பதாகவும் அதற்காக தன் வீட்டில் கெட்டுப்போன பொருட்களை கொட்டுவதாகவும், வாளியில் சிறுநீரைப் பிடித்து, அதையும் தன் வீட்டின் சமையலறைச் சுவற்றின் மீது கல்பனாவின் தம்பி குமார் கொட்டியதாகவும் குற்றம்சாட்டி அண்மையில் வீடியோ வெளியிட்டார்,
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 'சிசிடிவி' பொருத்தி, சரண்யா மற்றும் கோபிநாத் குடும்பத்தினர் வீடியோ எடுத்து அதனை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இதனிடையே தான் புகார் கொடுத்த பிறகு தனக்கு பாதுகாப்பு இல்லை என்று சரண்யா செய்தியாளர்களிடம் இன்று கூறினார். இதற்காக கோவை காவல் ஆணையர் அலுவலகம் வந்து இன்று புகாரும் அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரண்யா, "என் பெயர் சரண்யா, கோவை மணியக்காரம்பாளையம், நட்சத்திர கார்டனில் இருந்து வந்திருக்கிறேன்.. கோவை மேயர் கல்பனா குறித்து ஆடியோ வீடியோ எல்லாவற்றையும் மீடியாவில் கொடுத்துள்ளேன்.
அதை எல்லாவற்றையும் நீங்க பார்த்திருப்பீங்க.. அதுக்கு அப்புறமும் அவங்ககிட்ட இருந்து எங்களுக்கு தொந்தரவு இருந்ததால், பாதுகாப்பு கேட்டு கோவை காவல் ஆணையர் அலுவலகம் வரை வந்துள்ளேன்.
அவங்க என் பன்றாங்க அப்படீன்னா (கோவை மேயர்) ஹவுஸ் இன்ஸ்சார்ஜ்கிட்ட போய் தூண்டிவிட்டு, குழந்தைங்க முன்னாடி ரொம்ப தப்பான வார்த்தைகள் பேசி,இப்பவே காலி பண்ணுங்க.. உங்களை யாரு மீடியாவில் பேச சொன்னது, யூடியூப்ல போடச்சொன்னது என்று திட்டுறாங்க..
அப்புறம் அவங்க அத்தையை விட்டு, எங்க வீட்டு முன்னாடி வந்து திட்டி,அறிவே இல்லை , எப்படி இந்த பொம்பளை பேசுறத எடுத்து போட்டாங்க அப்படீன்னு கேட்குறாங்க... நானும் லேடி தானே..நானும் தனியாக இருக்கும் போது இவ்வளவு தொல்லைகள் கொடுத்தாங்க.. அவங்களுக்கு என்று வரும் போது மட்டும் இப்படி சொல்றாங்க..
எங்க ஹவுஸ் இன்சார்ஜ் தப்பு பண்ணுணவங்கள காலி பண்ண சொல்லல.. நேராக எங்க வீட்டுக்கு வர்றாங்க.. எங்களை காலி பண்ண சொல்றாங்க.. அதுக்கு அப்புறம் எங்கள் கம்பவுண்டுக்கு கோவை மேயர் கல்பானா தம்பி, புதுசா சிலரை கூட்டி வந்து நாங்க யாருன்னு காட்டுறாங்க.. அதுனால எங்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை.. வீட்டு இன்சார்ஜ்னாலயும் தொல்லை..
அங்கு பாதுகாப்பு இல்லாததால் கமிஷ்னர் ஆபிஸ் வந்து புகார் கொடுத்துள்ளேன். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷ்னர் ஆபிஸில் சொல்லியிருக்கிறார்கள். என் மீதும் புகார் கொடுத்துள்ளார்கள். துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். துடியலூர் காவல் நிலையத்தில் இருந்து நேற்று இரவு விசாரணைக்கு அழைத்தார்கள். குழந்தைக்கு முடியவில்லை என்றும், அன்டைம் என்று சொல்லி நாங்கள் போகவில்லை." என்றார்.
இதனிடையே கோவை மேயர் கல்பானா சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தவறான தகவல் என்றும், ஆதரமற்ற விஷயங்களை பேசுவதாகவும் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications