நடக்கும் போதே சுருண்டு விழுந்த நபர்..வெலவெலக்க வைக்கும் வெள்ளியங்கிரி..8வது பலியால் அதிர்ச்சி
கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்த எட்டாவது நபர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென் கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயில் அமைந்திருக்கிறது.

ஏழு மலைகளைத் தாண்டி சுயம்பு வடிவாக இருக்கும் சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். குறிப்பாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறி சிவபெருமானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
வெள்ளியங்கிரி மலை: வெள்ளியங்கிரி மலையில் ஏறி இறங்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. வழுக்கும் பாறைகள் ஆபத்தான பாதைகளைக் கடந்து ஏழு மலை தாண்டிய சிவபெருமானை தரிசிக்க முடியும். அதற்கு உடல் வலிமையோடு மனவலிமையும் சிவபெருமானின் அருளும் இருந்தால்தான் வெள்ளியங்கிரி சிவனை தரிசிக்க முடியும் என சொல்வது உண்டு.
அடுத்தடுத்து பலி: இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலையில் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் பலியாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதை அடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்தது.
கட்டுப்பாடுகள்: குறிப்பாக குழுக்களாக பயணம் செய்ய வேண்டும், பிபி சுகர் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மலை ஏற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் அடுத்தடுத்து வழி சம்பவங்கள் ஏற்பட்டு வருவது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தான் ஒரு சோக சம்பவம் வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்டிருக்கிறது
இளைஞர் பலி: சித்ரா பவுனியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞரான வீரகுமார். தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். ஏழாவது மலையில் இருந்து கீழே இறங்கும்போது அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சக பக்தர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளியங்கிரி மலையில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications