கோவை மருதமலையில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா.. மூலஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு
கோவை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா கிருஷ்ணன் கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வருகிறார் நடிகை திரிஷா. இயக்குநர் அமீரின் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம்தான் திரிஷா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

திரிஷா, அசின் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக நடித்து வந்தபோது, அசின் திடீரென பாலிவுட்டுக்குத் தாவினார். அதேசமயத்தில் நடிகை நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தது. அப்போது, திரிஷாவுக்கான பட வாய்ப்புகள் குறைந்து வந்தன. இந்நிலையில், 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் தடம் பதித்தார்.
நயன்தாராவுக்கு தற்போது பட வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கோலிவுட்டில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோயினாக இருப்பது திரிஷாதான் என்கின்றன சினிமா வட்டாரங்கள். நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
லியோ, கோட் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் திரிஷா ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிந்துள்ளது.
தற்போது, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சூர்யாவின் 45 ஆவது படமான இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பிஎஸ்ஜி கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகை திரிஷா தனது 22 ஆண்டுகால சினிமா பயணத்தை தனது சூட்டிங் ஸ்பாட்டில் சக சினிமா ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். அதைத்தொடர்ந்து, கோவையில் பிரசித்தி பெற்ற திருத்தலமான மருதமலை முருகன் கோயிலிலும் திரிஷா சுவாமி தரிசனம் செய்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று கோவை மருதமலை முருகர் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் செய்தார். கோவில் மூலஸ்தானத்தில் தரையில் அமர்ந்து அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications