"மக்களவை தேர்தலில் திமுகதான் வெல்லும்"! பாஜக மேடையில் சொன்ன கஸ்தூரி! அர்ஜுன் சம்பத் செய்த செயல்
கோவை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் திமுகவை எதிர்க்கும் வலுவான கட்சிகள் ஏதும் தமிழகத்தில் இல்லை என்றும் நடிகை கஸ்தூரி பரபரப்பு தகவலை அளித்தார்.கோவையில் நேற்று பிரதமர் மோடிக்காக இந்து மக்கள் கட்சி நடத்திய பிரச்சார கூட்டத்தில் கஸ்தூரி இவ்வாறு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அங்கிருந்த அர்ஜுன் சம்பத் முகம் வாடிய நிலையில் அந்த இடத்தை விட்டு சைலண்ட்டாக நகர்ந்து சென்றார்.
கோவை சித்தாபுத்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் அது உண்மைதான். தமிழகத்தை பொருத்தமட்டில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. திமுக வலுவாக இருக்கிறது என்பதை விட திமுகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் வலிமையாக இல்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்காது.
வேண்டுமானால் திமுகவை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சி யார் என்பதை நிரூபிக்கும் தேர்தல் இது என வைத்துக் கொள்ளலாம் என்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த அர்ஜுன் சம்பத்தின் முகம் சுருங்கி போய்விட்டது. உடனே ஒரு கட்டத்தில் அங்கிருந்து சப்தமில்லாமல் நகர்ந்து சென்றார்.

இதையடுத்து கஸ்தூரி தொடர்ந்து பேசுகையில் அதிமுக, பாஜக ஒற்றுமையாக இல்லை. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று திமுக கட்டுக்கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருக்கிறது. எதிரணி வலுவாக இல்லாததால் நிச்சயமாக திமுக அதிக இடங்களில் வெல்லும் என்பது நிதர்சனமான உண்மை என தெரிவித்தார்.
வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் திமுகவிற்கு சாதகமாக பேசுகிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி, உண்மையை தானே சொன்னேன், நான் பாஜக உறுப்பினர் இல்லை. ஒரு வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே. பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றும் தனது வாக்கு பாஜகவிற்குதான் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications