கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. அதிமுக பிரமுகரிடம் விசாரணை.. தனிப்படைக்கு கிடைத்த க்ளூ?
கோவை: கோடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் அதிமுக பிரமுகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அப்போது மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயமடைந்தார்.
மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர்.

ஜெயலலிதா கார் டிரைவர்
இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகஜார் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊட்டி கோர்ட்
இது தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. சேலம் சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்து உள்ளார்.

ஆறுகுட்டியின் மகனிடமும் விசாரணை
ஆறுகுட்டியிடம் நேற்று கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆறுகுட்டியின் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுகுட்டியிடம் உதவியாளராக இருந்த நாராயணன் உள்ளிட்டோரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

அதிமுக பிரமுகர்
இந்த விசாரணையில் ஜெயலலிதா மறைந்த பிறகு கனகராஜ் எங்கிருந்தார், அவருடன் யாரெல்லாம் பழகினார்கள், அவர் யாரையெல்லாம் சந்தித்தார் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கனகராஜ் இறப்பதற்கு முன்னர்
கோவை அம்மா பேரவை இணைச் செயலாளராக இருக்கிறார் அனுபவ் ரவி. கனகராஜ் இறப்பதற்கு முன்னர் ரவியுடன் தொடர்பு கொண்டார் என தனிப்படை போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதை வைத்து மேற்கு மண்டல ஐஜி சுகாதர் தலைமையில் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தன்னிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு தடை கோரி அனுபவ் ரவி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications