அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது: “2 நாளில் நிச்சயதார்த்தம்.. அவரை விடுங்க”: முற்றுகையிட்ட அதிமுகவினர்!
கோவை: முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு இன்னும் 2 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம்.
தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை உயர்வு தொடர்பாக குடிமகன் ஒருவர் மதுபாட்டிலை தலையில் வைத்துக்கொண்டு, மது விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஆபாச வார்த்தைகளால் விமர்சிப்பது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோவை பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி அருண்குமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொள்ளாச்சி திமுக வழக்கறிஞர் அணியினர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க செயலாளர் அருண்குமாரை பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண் குமார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்ன சிறையில் அடைத்தனர். இந்த கைது சம்பவத்தை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவனர் பொள்ளாச்சி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு வீடியோவை ஃபார்வர்டு செய்ததற்காக கைது செய்தால் ஃபார்வர்டு செய்த அணைவரையும் கைது செய்வீர்களா என போலீசாரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். பின்னர் போலீஸ் டிஎஸ்பி ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அருண்குமாரை விடுவிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிமுகவினர் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி அருண்குமாரை பொள்ளாச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அருண்குமார், பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "அருண்குமாருக்கு இரண்டு நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொய் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை ஷேர் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தாக்குதல் தொடுக்காத நிலையில் பழிவாங்கும் நோக்கோடு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனக் குற்றம்சாட்டினார்.











Click it and Unblock the Notifications