சூடுபிடிக்கும் தவெக மாநாடு.. இந்த நேரத்தில் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் கொடுத்த புகழேந்தி
கோவை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசத்தை பாராட்டியும், எக்காலத்திலும் அரசியலில் இருந்து பின்வாங்கி விட வேண்டாம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் மருது சகோதரர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்துகொண்டு மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் தேவர், வேலுநாச்சியார் மூவருக்கும் சிலை நிறுவப்பட வேண்டும். அந்த சிலையை நானே தருவேன். அதுமட்டுமின்றி மருது சகோதரர்களுக்கும் தனி இடத்தில் தனி சிலை அமைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதிமுகவை ஒருங்கிணைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி உள்ளதற்கு பாராட்டுக்கள். அவர் எக்காலத்திலும் அரசியலில் இருந்து பின்வாங்கி விட வேண்டாம். மாற்றத்திற்காகவே விஜய் அரசியலுக்கு வருகிறார். அந்த மாற்றம் அவரிடம் இருந்தே வரட்டும். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும்.
நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. கமல் வேறு விதமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்குச் சென்றுவிடும். புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும். சசிகலா ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக செயல்பட வேண்டும். அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும் என்று தான் கூறுகின்றனர். அதிமுகவை தற்பொழுது உள்ள தலைவர்கள் நடத்தவில்லை. பாஜக தான் நடத்தி வருகிறது. தற்போது ரெய்டு செல்லும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்கவில்லை?. பாஜகவை பார்த்து இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் பயம்.
எஸ்.பி. வேலுமணி பாஜகவில் உள்ளார். அதனால், அவர் எதுவும் பேச மாட்டார். நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறினாலும் தான் இந்த கட்சியில் இருந்து பிரிந்து வரமாட்டேன். இன்று நடக்கும் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்ததற்கு பாராட்டுக்கள். விஜய்யின் கோட்பாடுகள் பெரியாரின் கோட்பாடுகளாக இருக்க வேண்டும்.
தற்பொழுது உள்ள சூழலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து நிமிடம் இறங்கி வந்தால் அனைத்தும் மாறிவிடும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி திருந்துவதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிச்சாமி தானே. ஆனால், தற்பொழுது திமுகவை கை காண்பிக்கிறார். முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications