"வைப்" செய்த கோவை மக்கள்.. ஒரு வருடத்துக்குப் பிறகு உற்சாகமாக தொடங்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
கோவை: கோவையில் கடந்த ஓராண்டுக்குப் பிறகு டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத்தினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆடல், பாடல், விளையாட்டு என செம்ம வைப் செய்து மகிழ்ந்தனர்.
கோவையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஓராண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சி கோவை மாநகரில் வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், குழு நடனங்கள், பள்ளி குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனால், இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஓராண்டாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது மீண்டும் கோவையில் துவங்கியுள்ளது.
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் இன்று காலை சுமார் 6:30 மணிக்கு நிகழ்ச்சியானது துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில், பல்வேறு சினிமா பாடல்கள் இசை நிகழ்ச்சிகள் குழு நடனங்கள் என ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஃபிட்னஸ் தொடர்பான நடனங்களில் பலரும் பங்கேற்று நடனமாடினர்.
இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து கண்டு ரசித்தனர். மேலும், பொதுமக்களும் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். அதேபோல, இந்நிகழ்ச்சியின் சிறப்பாக 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டுகளான சாக்குப் போட்டி, டயர் ஓட்டுதல், குண்டு விளையாடுதல், பெரியளவிலான பரமபதம் ஆகியவையும் இடம் பெற்று இருந்தன.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கைகளில் வண்ணத்துப்பூச்சி, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கலர் டாட்டூக்கள் வரையப்பட்டன. குழந்தைகள் சாலை முழுவதும் தங்களுக்குப் பிடித்த படங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை வரைந்து மகிழ்ந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.












Click it and Unblock the Notifications