என்னது திமுக- பாஜக இடையே போட்டியா? மக்கள் கிட்ட போய் கேளுங்க.. அண்ணாமலைக்கு எடப்பாடி நறுக் பதிலடி!
கோவை: லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகளிடையே போட்டி என பொதுமக்களிடம் கேட்டுப்பார்த்தால் உண்மை தெரிய வரும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி என அண்ணாமலை சொல்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? மக்களிடத்தில் போய் கேளுங்க.. யார் யாருக்கு எதிரி என மக்களிடம் கேட்கட்டும். அப்போது மக்கள் தெளிவாக சொல்வாங்க.

பிரதான எதிர்க்கட்சி: அண்ணா திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சி. தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக. வேண்டும் என்றே திட்டமிட்டு சில பேர் சொல்றாங்க.. அதற்கு நாங்க என்ன செய்ய முடியும்?
உதயநிதிக்கு பதில்: திமுகவுடன் போட்டி போடுவதில் அதிமுக- பாஜக இடையே போட்டி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருப்பது மாய உலகத்தில் மிதந்து கொண்டு பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அதற்கு விடிவு காலம் பிறக்கும்.

தெளிவான முடிவுதான்: பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை. இது தொடர்பாக அதிமுக தெளிவான முடிவை எடுத்து அறிவித்துவிட்டது. பத்திரிகை, ஊடகங்கள்தான் எதையாவது எழுதிக் கொண்டிருக்கின்றன. விவாத நடத்துகின்றன. ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக விவாத மேடை நடத்துகிறீர்களா? ஒரு விவாத மேடையாவது அரசாங்கம் பற்றி வைக்கிறீங்களா? என்ன பயம்னே எங்களுக்கு தெரியலை? ஆளும் கட்சியாக நாங்க இருக்கும் போது எங்களை எப்படி எல்லாம் விமர்சனம் செஞ்சீங்க? நடைபெறும் தவறுகளை தர்ம நீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.

பாஜக கருத்து: கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்கள் சொல்கிற கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். அதன்பிறகும் தினந்தோறும் ஏதேனும் ஒரு கேள்வியை அதுபற்றி கேட்டுக் கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வது? மீண்டும் மீண்டும் பாஜக பேசுவதாக பேசிக் கொண்டிருந்தால் என்ன?
அதிமுகவின் அஜெண்டா: லோக்சபா தேர்தலில் பல மாநிலங்களில் கட்சிகள் பிரதமர் வேட்பாளரையே அறிவிக்கவில்லையே.. தமிழ்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதிமுக அதிக இடங்களில் வெல்லும் போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே வலியுறுத்துவோம்.

அட்ரஸ் இல்லாமல் போகும்: டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அவர் கட்சியே இல்லை. அவரது கட்சியையும் நாங்க பார்க்கிறது இல்லை. இந்த தேர்தலுடன் அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும். விலாசம் தெரியாத ஒரு கட்சியாகும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications