இப்போதே பணியை ஆரம்பிக்கனும்.. நாடாளுமன்ற தேர்தல் டார்கெட் இதுதான்.. இபிஎஸ் பரபர
கோவை: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். இப்போது இருந்தே தேர்தல் பணியை ஆரம்பிக்க வேண்டும். அதிமுகதான் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி.எந்த தேர்தல் வந்தாலும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு கோவை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை காளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுகவில் மட்டுமே அடைய முடியும்
சாதாரண தொண்டன் கூட உச்சப்பட்ச பதவியை அதிமுகவில் மட்டுமே அடைய முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. திமுகவில் கருணாநிதியினுடைய குடும்பதான் ஆட்சி புரியும். கட்சி பதவிக்கு வர முடியும். கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளார். அடுத்ததாக வாரிசு அரசியலுக்கு அடித்தளமாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கிறார்கள்.

சாதாரண தொண்டன் கூட
திமுக மூத்த அமைச்சர் ஒருவர் கருணாநிதியுடன் அமைச்சராக இருந்தோம், மு.க.ஸ்டாலின் உடனும் அமைச்சராக இருக்கின்றோம், உதயநிதி ஸ்டாலினோடும் தற்போது அமைச்சராக உள்ளோம். அடுத்து உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியுடனும் அமைச்சராக இருப்போம் என்று அடிமை சாசனத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிமுக அப்படி அல்ல. சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர கூடிய ஒரே கட்சி அதிமுக.

வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?
ஜனநாயக அமைப்புள்ள ஒரு கட்சி இந்தியாவிலே அதிமுகதான். அதிமுகவில் தான் சாதாரண நபர் கூட எம்.எல்.ஏ, எம்.பி , முதல்வராக முடியும். வேறு எந்த கட்சியிலாவது முடியுமா? திமுக ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியின் சேர்மன் மு.க. ஸ்டாலின். இயக்குனராக இருப்பவர்கள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள். இவர்கள்தான் கட்சியிலும் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்திலும் அங்கம் வகிக்கிறார்கள்.

இனி எந்த தேர்தல் வந்தாலும்
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார்கள். திமுக ஆட்சி மக்கள் மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். பொம்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அதிமுகவினர் மீது வழக்கு போடுவதை தவிர மு.க.ஸ்டாலின் வேறு எதுவும் செய்ய வில்லை.

பொய்யான தோற்றத்தை..
மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை. கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்தோம். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் குறித்து விரிவான திட்ட அறிக்கை மேற்கொண்டு பணிகளை தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தது போல மு.க.ஸ்டாலின் பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அதிமுக தான் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தது.

40 தொகுதிகளிலும் அதிமுக தான்
சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் உள்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். இப்போது இருந்தே தேர்தல் பணியை ஆரம்பிக்க வேண்டும். அதிமுகதான் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி.எந்த தேர்தல் வந்தாலும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications