பரபரக்கும் அதிமுக.. செங்கோட்டையன் வீட்டிற்கு இரவோடு இரவாக பாதுகாப்பு அதிகரிப்பு!
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்குக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் ஏற்கனவே 2 போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும் நிலையில், தற்போது, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஒபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை நடத்தி வந்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வமும் நீக்கப்பட்டார். அதிமுகவை முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

எனினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. இதில் செங்கோட்டையனும் ஒருவர் என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோவை அன்னூர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
முதல்வராக இருந்த போது அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், விவசாய சங்க பிரதிந்திகள் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தும் அவர் விழாவில் பங்கேற்கவில்லை. மாறாக மேடையில், ஜெயலலிதா மற்றும் எம் ஜி ஆர் ஆகியோரின் படம் இல்லாமல் இருந்தது என்றும் இதனால் தான் பங்கேற்கவில்லை. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை என்று கூறினார்.
மேற்கு மாவட்ட அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது மேலும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
இந்த சூழலில் தான், செங்கோட்டையன் வீட்டுக்குக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு. இந்த வீட்டில் ஏற்கனவே 2 போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும் நிலையில், தற்போது, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதல் ஏற்பட்டு இருக்க கூடிய நிலையில், செங்கோட்டையனை சமரசம் செய்ய கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. அதேவேளையில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இத்தகைய பரபரப்புக்கு இடையே செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications