அண்ணாமலைக்கு வாக்கு கேட்டு வருவீர்களா.. பாஜகவினர் மீது கல்வீசி தாக்கிய கோவை இளைஞர்
கோவை: கோவையில் அண்ணாமலைக்காக வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் மீது கற்களை வீசிய இளைஞர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகரம், கண்ணப்பா நகர் அருகே உள்ள சண்முகா நகருக்கு பாஜக பிரமுகர் அர்ஜுனன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், நேற்றிரவு அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றுள்ளனர்.

அப்போது, கண்ணப்பா நகரைச் சேர்ந்த நௌசத் (18) என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். பண்ணுவது முழுக்க அட்டூழியம், விதைப்பது வன்முறை, அப்படியிருக்கும்போது, எங்கள் பகுதிக்கு எதுக்கு, வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் எனக்கேட்டு, பாஜகவினர் மீது , அவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார். இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர், பிரபு என்பவர், சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது பகுதிக்குள் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்று பாஜகவினரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நெளசாத் என்ற இளைஞரை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
போலீசார் விசாரணையில் அவர், பிசி ஏ முதலாமாண்டு படித்து வருவதாகவும், பாஜகவினர் மீது கல்வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications