ஆனைக்கட்டி பகுதியில் காயமடைந்த யானை - தேடும் பணியில் வனத்துறை - கும்கி யானைகள்!
கோவை : கோவை அருகே தமிழக - கேரள எல்லையான ஆனைக் கட்டி பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். யானையை ட்ரோன் மூலம் தேடி வரும் வனத்துறையினர், கும்கி யானைகளையும் அழைத்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு - கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆனைகட்டி பகுதியில், காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில், எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும் உண்டு.

இந்நிலையில், ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் நின்று கொண்டிருந்ததால், யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என தமிழக - கேரள மாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது.
அதே சமயம், கேரள வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத் துறையும், தமிழக வனப் பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நின்றனர். இதன் காரணமாக அந்த காட்டு யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து, செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்தபோது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து கலி மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் ஆனைகட்டி கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications