சிறையில் இருந்து திமுக அமைச்சர்களை செல்போனிலேயே இயக்குகிறார்.. "வசனகர்த்தா" செந்தில் பாலாஜி
கோவை: சிறையில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜி திமுக அமைச்சர்களை இயக்குகிறார் என தமிழக பாஜக தலைவரும் கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலில் சொந்த ஊரான அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இந்த முறை எப்படியும் பாஜக பல்வேறு இடங்களில் வென்று காட்டும் என சவால் விடுத்துள்ளார்.

சரவணம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென் சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12 ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் திமுகவுக்கு என்ன பயம் இருக்கிறது என தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்பதை திமுகவினரால் சொல்ல முடியுமா? அவர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்றுவிடுகிறார். திமுகவினர் தாங்கள் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டம், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே இருக்கிறது. தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகும்.
ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையைதான் இங்கு வந்திருக்கும் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். சிறையில் இருந்தபடியே செல்போனில் அமைச்சர்களுடன் பேசி வருகிறார் செந்தில் பாலாஜி. சிறையில் இருந்து கொண்டே தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே திமுகவினர் தோண்டி எடுத்து கொண்டு வந்தாலும் மக்கள் அதற்கெல்லாம் அசரமாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஜூன் 4ஆம் தேதி சாமானியனின் குரல் மூலம் யார் வெல்வார்கள் என தெரியவரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனால் நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் விண்ணப்பித்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்காததற்கு காரணம், அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை வெளியே வரக் கூடாது என பாஜகவினர் கருதுவதால்தான் என கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications