நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை.. வீடியோ இருந்தா வெளியிடுங்கள்.. அண்ணாமலை மறுப்பு
கோவை: நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை என கோவை ஆவாரம்பாளையம் சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: கோவையில் தேர்தல் விதிகளை மீறவில்லை. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை. இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சார வாகனத்தை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என எந்த தேர்தல் விதியில் கூறப்பட்டுள்ளது? நான் தேர்தல் விதியை மீறினேன் என்று கூறுபவர்களுக்கு தேர்தல் விதிகளே தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
மைக்கில் பிரச்சாரம் செய்யவில்லை, அதே நேரம் மக்களை சந்திப்பதில் தவறில்லை. காவல் துறை அனுமதி கொடுத்த இடங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் பிரச்சாரம். திமுகவினர் பிடித்து தள்ளியதால்தான் கைகலப்பு ஏற்பட்டது. கோவையில் திமுக டெபாசிட் வாங்காது, இதனால்தான் தகராறு செய்கிறார்கள்.
நான் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த வீடியோவை திமுகவினர் வெளியிட தயாரா? தேர்தல் அதிகாரிகள் கேமராவுடன் வருகிறார்கள். அப்படியெனில் 10 மணிக்கு மேல் நான் பேசிய வீடியோவை வெளியிடலாமே என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னணி என்ன: கோவை ஆவாரம்பாளையம் 28ஆவது வார்டு பகுதியில் நேற்று இரவு கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இரவு 10 மணியை தாண்டிவிட்டது. எனினும் அவர் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது.
இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை. எனினும் தொடர்ந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தாராம். இந்த நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதுகுறித்து அங்கிருந்த காவல் துறையினரிடம் புகார் செய்தனர்.
இரவு 10.40 மணி வரை அண்ணாமலை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதி அளித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதை அறிந்த பாஜகவினர், அந்த இடத்திற்கு வந்து திமுகவினர் தாக்குதல் நடத்தினாராம். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குணசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மாசாணி, ஆனந்தன், லட்சுமி செந்தில் , ரங்கநாதன் ஆகியோர் மீது கோவை ஆவராம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் சிலருக்கு மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications