அண்ணாமலை பாதயாத்திரை திடீர் ஒத்திவைப்பு.. ஒரு வாரம் ‘பிரேக்’.. காரணம் இதுதானாமே!
கோவை: மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த "என் மண் என் மக்கள்" நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாட்டின் அத்தனை தொகுதிகளுக்கும் விசிட் அடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக கோவையில் அண்ணாமலையின் நடைபயணம் நடைபெற்று வருகிறது. நாளை மேட்டுப் பாளையத்தில் பாதயாத்திரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நாளை மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த பாதயாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், "நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட பாஜக சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4ஆம் தேதி நமது நடைபயணத்தின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது…
— K.Annamalai (@annamalai_k) September 27, 2023
அதேசமயம், நாளை நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதற்கு மிலாடி நபி மட்டும் காரணம் அல்ல என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். அண்மையில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக, மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அண்ணாமலையின் ஒரு சில நடவடிக்கைகளால் மட்டுமே கூட்டணியை தொடர முடியாத நிலைக்கு வந்துள்ளதாக விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் பாஜக தரப்பு கப் சிப் என அமைதி காத்து வருகிறது. கூட்டணியை முறிப்பதற்கு முன்பே செய்தியாளர்கள் சந்திப்பில், 'ரெய்டு வரும் என்ற பயம் எல்லாம் இருக்குமில்லையா' என்று மறைமுகமாக அதிமுகவினரை விமர்சித்த அண்ணாமலை தற்போது மௌனமாக இருக்கிறார். தேசிய தலைமை தான் இது குறித்து பேசும் என்று கூறி வருகிறார்.
அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி முறிவு தொடர்பாக அண்ணாமலையிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். இதன் காரணமாகவும் தான் மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த பாதயாத்திரை ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications