சனாதனத்தை காக்க முடியாவிடில் எனக்கெதற்கு பாஜக தலைவர் பதவி? பெரியார் அடிவாங்கியதை பேசுவேன்! -அண்ணாமலை
கோவை: சனாதன தர்மத்தை பாதுகாக்க முடியாவிட்டால் தனக்கெதற்கு பாஜக தலைவர் பதவி என அண்ணாமலை பேசியிருக்கிறார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
சனாதனத்தை பாதுகாக்க முடியாத ஒரு பதவி தனக்கு தேவையே இல்லை என்பதை போல் அண்ணாமலை ஆவேசம் காட்டினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னால் பேலன்ஸ் செய்தெல்லாம் பேசமுடியாது என்றும் சனாதனம் எங்கள் உயிர்மூச்சு எனவும் கொந்தளித்தார். .

சனாதன தர்மத்தை பற்றி பேசினால் தாம் உண்மையை பேசுவேன் என்றும் பெரியார் அடிவாங்கியதை பேசுவேன் எனவும் அண்ணாமலை பேசினார். ஏற்கனவே அண்ணாவை பற்றி பேசியதற்கே அண்ணாமலை மீது விமர்சனக் கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரியார் அடிவாங்கியதை பேசுவேன் எனக் கூறி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
தன்னால் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்க முடியாது என்றும் வெற்றியோ தோல்வியோ இது தனது தன்மானப் பிரச்சனை எனவும் அதிமுக மீது அனல் கக்கினார் அண்ணாமலை. அதிமுகவிடம் தன்னால் அடிமையாக எல்லாம் இருக்க முடியாது என்று ஆவேசம் காட்டிய அண்ணாமலை, சனாதன தர்மத்தை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என மிகத் தெளிவாக கூறிவிட்டார்.

இன்னும் சொல்லப்போனால் முதலில் சனாதன தர்மம், பிறகு தான் கட்சி, கூட்டணி, தேர்தல் எல்லாம் என்பதை அவர் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் உணர்த்தியுள்ளார். அதிமுக -பாஜக இடையேயான கூட்டணியில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications