கோவையில் ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட போறீங்களா.. கலெக்டர் பவன்குமார் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவையில் ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட போறீங்களா.. அதற்கு அனுமதி வாங்குவது குறித்து கலெக்டர் பவன்குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோவை ஊராட்சி பகுதிகளில் 2,500 சதுரஅடி வரையிலான இடத்தில் 3,500 சதுரஅடி வரையிலான கட்டிடம் கட்ட சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு எளிதாக அனுமதி வாங்குவது குறித்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சாதாரண வீடு கட்டும் பொது மக்களுக்கு உடனடி கட்டட அனுமதி வழங்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி வரையிலான பரப்பளவு கட்டடங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டப்படி பொது மக்கள் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்து, உடனடி கட்டட அனுமதி பெறுகின்றனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கோவை ஊராட்சி பகுதிகளில் 2,500 சதுரஅடி வரையிலான இடத்தில் 3,500 சதுரஅடி வரையிலான கட்டிடம் கட்ட சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் குடியிருப்பு கட்டிட அனுமதியை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க முடிகிறது. கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை செலுத்துவதும் எளிமை ஆக்கப்பட்டு உள்ளது. கட்டிட அனுமதியை பெறுவதில் இடைத் தரகர்களை தவிர்த்தல் மற்றும் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுய சான்று மூலம் அனுமதி பெற்று கொள்ள முடியும்.
எனவே குடியிருப்பு கட்டிடம் கட்ட விருப்பம் உள்ள பொது மக்கள் பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுனரால் கையொப்பம் இடப்பட்ட திட்ட வரைபடம், விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம், தளபுகைப் படம் ஆகிய ஆவணங்களை இணைத்து பயன் அடையலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சுயசான்று முறைக்கு உட்படாத, 3,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதி கட்டணம் உண்டு என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. இதில் கட்டடம் கட்ட அனுமதி பெற, உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப, சதுர அடிக்கு, 15 முதல், 100 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர்த்து, வேறு எந்த கட்டணமும் இதற்கு வசூலிக்கப்படாது. இந்நிலையில், சுயசான்று முறைக்குள் வராமல், வழக்கமான நடைமுறைப்படி, 3,500 சதுர அடி வரை கட்டடம் கட்ட அனுமதி கோருவோருக்கு, எப்படி கட்டணங்கள் வசூலிப்பது என்பதில் குழப்பம் எழுந்து வந்தது.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறுகையில், "சுயசான்று முறைக்கு உட்படாத குடியிருப்பு மற்றும் பிற வகை கட்டடங்களுக்கு, உள்கட்டமைப்பு வசதிகள் கட்டணம், வளர்ச்சி கட்டணம், கட்டட உரிம கட்டணம், தொழிலாளர் நல நிதி வசூலிக்கலாம்.
இதில், 3,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம் வசூலிக்க அவசியமில்லை. இந்த வகை கட்டடங்களுக்கும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம், இது தொடர்பான தலைப்பில் வரும் பிற கட்டணங்களையும் வசூலிக்க வேண்டும். இதற்காக, ஆன்லைன் கட்டட அனுமதி சாப்ட்வேரில் உரிய மாற்றங்கள் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications