மருதமலைக்கு காரில் போறீங்களா?.. நாளை முதல் அமலாகும் கட்டுப்பாடுகள்.. நோட் பண்ணுங்க
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் ரம்மியமான மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு கோவை மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது. முருக பக்தர்களுக்குப் பிடித்த கோயில்களில் பிரதான இடம்பிடித்திருப்பது மருதமலையாகத்தான் இருக்கும்.

மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
தைப்பூசம் அன்று மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மருதமலையில் முருகன் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்டிகை, விஷேச தினங்கள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றின்போது கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோவை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனம் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலை படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், கோயிலில் நடைபெற்றும் வரும் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications