சனாதனத்தை ஒழிக்கிறாங்களா? திராவிடத்தை ஒழிக்கிறோம்! நவ.1ல் சென்னையில் மாநாடு.. அர்ஜுன் சம்பத் அதிரடி
கோவை: நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூரில் அர்ஜுன் சம்பத் பேசுகையில் இரு நாட்களுக்கு முன்பு திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த சோனியா, பிரியங்காவிடம் காவிரி பிரச்சினை குறித்து கூறியிருக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு நேரடியாக அழுத்தம் அளித்திருந்தால் காவிரி நீரை நிச்சயம் பெற்றிருக்க முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நிர்பந்தம் செய்யவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார். அவருடைய தாய் துர்கா ஸ்டாலினோ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடப்படி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் பயங்கரவாதி இமாம் அலியை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது யார்? ஜெயலலிதா தலைமையிலான அரசுதானே! அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
அவர் நிர்வகித்த அதிமுக இப்போது முஸ்லீம்களை தாஜா செய்கிறது. வரும் 29ஆம் தேதி சென்னிமலையில் ஜெபக் கூடம் அமைக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும். தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புமர்வு பெற்று வருகிறார்கள்.
சாமி இல்லை என சொல்லும் திராவிட கட்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையின் மூலம் வெளிப்படுகிறது. திமுகவையும் அதிமுகவையும் வேண்டாம் என நினைப்பவர்கள் லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகிறார்கள்.
இந்த அரசியல் மாற்றத்திற்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். ஹமாஸ் இயக்கத்தை அல் உமா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடக் கட்சிகள் ஆதரித்து வருகிறார்கள். இதை மத்திய உளவுத் துறை கண்காணிக்க வேண்டும். காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திமுக , காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications