கோவை ஏர்போர்ட்டில் இட்லி வடை ரூ.200.. சப்பாத்தி ரூ.200.. தோசை விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
கோவை: கோவை விமான நிலையத்தில் இரண்டு இட்லி மற்றும் ஒரு வடை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் இட்லி ஒன்று ரூ.90, ஒரு செட் இட்லி மட்டும் ரூ.120, பரோட்டா குருமா ரூ.200, சப்பாத்தி ஒரு செட் ரூ.200, ஆனியன் ரோஸ்ட் ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை பீளமேட்டில் அமைந்துள்ள விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த விலை கேட்போரை நிச்சயம் தலை சுற்ற வைக்கும். விமான நிலையத்திற்கு மட்டுமில்லை. விமான நிலையத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள கடையிலும் இதேபோலவே விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள், தப்பித்தவறி கூட ஏர்போர்ட்டில் சாப்பிட ஆசைப்படக்கூடாது என்பது போல் உணவு பொருட்களின் விலை இருப்பதாக, மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை சித்ரா விமான நிலையத்தில் ( தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் என்பதன் ஆங்கில சுருக்கமே சித்ரா) சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. இங்கு தினமும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் இறங்கி செல்கின்றன.
கோவை விமான நிலையத்தில் விமானம் ஏறப்போகிறவர்கள் அங்குள்ள கடைகளில் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையை கேட்டிருக்கிறீர்களா. சர்வதேச விமான நிலையமான சென்னையில் உள்ளதை போன்று மிக அதிகப்படியான விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னையிலாவது, ஏர்போர்ட்டுக்கு வெளியிலேயே குறைந்த விலையில் சாப்பிட முடியும் என்றும் ஆனால் கோவை விமான நிலையத்தில் அப்படி இல்லை. குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் சாப்பிட முடியும் என்றும் பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
பயணி ஒருவர் கூறும் போது, கோவை விமான நிலைய வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் இரண்டு இட்லி மற்றும் ஒரு வடை ரூ.200-க்கு விற்பனை ஆகிறதா. சாம்பார் இட்லி ஒன்று ரூ.90, ஒரு செட் இட்லி மட்டும் ரூ.120, பரோட்டா குருமா ரூ.200, சப்பாத்தி ஒரு செட் ரூ.200, ஆனியன் ரோஸ்ட் ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்கிறார்கள்.
விமான நிலையத்தில் உட்புறத்தில் இப்படி என்றால், விமான நிலையத்தின் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் ஒரு தோசை ரூ.150, மசால் தோசை ரூ.170, இட்லி, வடை ரூ.140, மினி சாம்பார் இட்லி ரூ.150, பொங்கல் ரூ.140, பூரி மசால் ரூ.150, வடை (இரண்டு) ரூ.90 என்ற விலையில் விற்பனை செய்கிறார்கள்.
விமானத்தை பிடிக்க வருபவர்கள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வர வேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ (நகரத்திற்குள்), வெளியில் என்றால் இரண்டு அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்ட வேண்டும். அப்படி வருபவர்கள் விமான நிலையத்தில் சாப்பிட நினைத்து சென்றால் நொந்து போய்விடுவார்கள் என்று பயணிகள் தெரிவிக்கிறார்கள். வழியனுப்ப வரும் நண்பர்கள், உறவினர்களும் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.
கோவை விமான நிலையம் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போல் முதல் தர சர்வதேச விமான நிலையம் கிடையாது, இரண்டாம் நிலை நகரங்களில் செயல்படும் விமான நிலையம் ஆகும். இப்படியான சூழலில் நியாயமான விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications