பெங்களூர் குண்டு வெடிப்பு- கோவையில் பயிற்சி டாக்டர்கள் 2 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை!
கோவை: கர்நாடகா மாநிலம் பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டின் கோவையில் (கோயம்புத்தூர்) பயிற்சி மருத்துவர்கள் 2 பேரிடம் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) (NIA) இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
பெங்களூரில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் அண்மையில் இரட்டை வெடிகுண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடகா போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பல பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்குக் காரணமான பயங்கரவாதிகள் சென்னைக்கு வந்து சென்றதும் விசாரணைகளில் அம்பலமானது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேற்கு வங்கத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் இன்று தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் இரண்டு இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.
பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஜாஃபர் இக்பால், நகீம் சித்திக் இருவரும் கோவையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இந்த இருவரும் தங்கி இருக்கும் சாய்பாபா காலனியில் உள்ள வீடுகளில்தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மேலும் இருவரும் பயிற்சி பெறுகிற மருத்துவமனைகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவை போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பெங்களூர் குண்டு வெடிப்பில் சிக்கிய சிலருடன் தொடர்பிருக்கிறதா? தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் இருவரும் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் விசாரணைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு சோதனை, விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.











Click it and Unblock the Notifications