பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு! பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு!
கோவை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பாஜகவுக்கு தான் என்று அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளார்.
மீண்டும் மோடி பிரதமராக வந்தால் கொங்கு பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்காமலேயே நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கோவை கருமத்தம்பட்டியில் பிரம்மாண்ட விழா எடுக்கப்பட்டு கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் இணைந்து இந்தக் கட்சியை தொடங்கினார்கள். கொமுக தலைவராக பெஸ்ட் ராமசாமியும், கொமுக பொதுச்செயலாளராக ஈஸ்வரனும் இருந்தார்கள். இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்ட கொமுக கணிசமான வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் கவனம் ஈர்த்தது.
அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்து காட்டியது கொமுக. ஒருக்கட்டத்தில் பெஸ்ட் ராமசாமிக்கு, ஈஸ்வரனுக்கும் இடையே பனிப்போர் முற்றி ஒருவரை ஒருவர் வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினர். கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு இருவரும் உரிமைக் கோரியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என பெஸ்ட் ராமசாமி கறாராக நின்றார்.
புதியக் கட்சியை ஆரம்பித்துக் கொள்கிறேன் எனக் கூறி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை ஆரம்பித்து தனி வழியில் பயணிக்கத் தொடங்கினார் ஈஸ்வரன். கூட்டணி விவகாரத்தில் சரியான முடிவை எடுத்து தனது கட்சி சார்பில் எம்.பி., எம்.எல்.ஏ.வை உருவாக்கி கட்சிக்கு புத்துயிர் ஊட்டிக்கொண்டார் ஈஸ்வரன். பெஸ்ட் ராமசாமியோ கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்டதால் கட்சி கலகலத்துப் போனது. ஈஸ்வரனை தொடர்ந்து ஜிகே நாகராஜும் கொமுகவிலிருந்து விலகிக் கொண்டார். இப்போது அவர் பாஜக விவசாய அணியில் மாநில பொறுப்பில் உள்ளார்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் விலகிச் செல்லுங்கள் பரவாயில்லை என்ற வைராக்யத்தோடு தாம் ஆரம்பித்த கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை இன்னும் நடத்தி வருகிறார் பெஸ்ட் ராமசாமி. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு பாஜகவுக்கு என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொமுகவை அதிமுக பெரிதாக கண்டுக்கொள்ளாத சூழலில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் பெஸ்ட் ராமசாமி. பாஜகவை பொறுத்தவரை சிறுகுச்சியும் பல்குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிய கட்சிகளின் ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் தான் தொடர்ந்து சின்னஞ்சிறிய கட்சிகளின் தலைவர்களிடமும் ஆதரவு கோரி வருகிறது.












Click it and Unblock the Notifications