10 ஆயிரம் பேருக்கு ஃப்ரீ பக்கெட் பிரியாணி.. பாதிரியார்களும் பங்கேற்பு! கலகலத்த கோவை ரம்ஜான் விருந்து
கோவை: ரம்ஜான் தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், கோவை கோட்டைமேடு பகுதியில் பெரியளவில் பிரியாணி சமைக்கப்பட்டு அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுக்க தேர்தல் களம் அனல் பறக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பிரச்சார பரபரப்புக்கு நடுவே நேற்று தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது கோவையில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விடிய விடியச் சமையல்: கோவையில் கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் மற்றும் கிரீன் கார்டன் குடியிருப்புவாசிகள் நல சங்கம் சார்பில் ரம்ஜானை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விடிய விடிய ராட்சத தேக்சாவில் பிரியாணி சமைக்கப்பட்டது. அந்த குடியிருப்புவாசிகள் இரவில் பிரியாணியைச் சமைக்கத் தொடங்கிய நிலையில், அதிகாலையில் பக்காவாக பிரியாணியைச் சமைத்து முடித்தனர்.
அதனைக் காலையில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கு வழங்கினர். மேலும், அங்கு இருந்த தூய்மை பணியாளர்களுக்கும் இந்த பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் மத பேதம் இல்லாமல் அங்கு வந்த அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடு இன்றி பகிர்ந்து தந்தனர். அந்த பகுதியில் வசித்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் என அனைத்து தரப்பினரும் இந்த மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கோவையில் மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி - 10 ஆயிரம் பக்கெட் பிரியாணி விநியோகம்..!#Coimbatore #SimpliCitynewsCoimbatore #Tirupur #Nilgiris #Pollachi #viral #SimpliCitynews #SimpliCity #News #Video #biryani #Ramzan #bucketbiryani pic.twitter.com/JgqdVSYMYz
— SimpliCityCoimbatore (@simplicitycbe) April 11, 2024
மத நல்லிணக்கம்: இதில் பங்கேற்ற கோவை பல் சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஹாஜி முகமது ரபிக் கூறுகையில், "நமது நாட்டிற்கு இப்போது மத நல்லிணக்கம் ரொம்பவே அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. இதன் காரணமாகவே கோவையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். இதுபோன்ற மத பாகுபாடு இன்றி அனைத்து நிகழ்ச்சிகளும் நாடு முழுக்க நடக்க வேண்டும். நமது நாடு சமத்துவம் சகோதரத்துவம் மத நல்லிணக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
அதன் ஒரு படியாகவே இந்த மத நல்லிணக்க பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாதி மத பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.
10 ஆயிரம் பிரியாணி: அங்கு வந்த 10 ஆயிரம் பேருக்கு இந்த பக்கெட் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மதத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது போன்ற மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications