கோவையில் திரண்ட பாஜகவினர்.. கொடிக் கம்பம் நட முயன்றபோது கைது.. கடும் வாக்குவாதம்!
கோவை: கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் புதிதாக கொடிக் கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனனர். மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே கூடிய மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே புதிதாக வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பாஜக கொடி கம்பம் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது நடந்த ரகளையில், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

அரசால், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், அண்ணாமலை இன்று முதல் அதாவது நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும், வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் என அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அண்ணாமலை அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதியான இன்று, சென்னை, கோவை உட்பட பல இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் அமைக்க முயன்றுள்ளனர்.
பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் நடப்படுகிறது என்றால் முறையாக நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் இருந்து அனுமதி பெற்று அக்கடிதத்தை போலீசாரிடம் அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட பிறகு, அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி கடிதம் இணைக்கப்படவில்லை என காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கொடிக் கம்பம் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே திரண்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநிலத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே உள்ளது. இங்கு இன்று பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி புதிய கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பாஜகவினருக்கும்,போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, உட்பட பாஜகவினர் சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதேபோல, கோவை தெற்கு மாவட்டம் பாஜக மதுக்கரை ஒன்றியம் செட்டிப்பாளையம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கூடி கொடி ஏற்ற முயன்றபோது தடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக கொடிக் கம்பம் அமைக்கும் முயற்சிகளின்போது அக்கட்சியினர் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications