"கல்லை வீசி அடிக்கிறான் குருநாதா.." கோவையில் ஹெல்மெட்டோடு பிரச்சாரம் செய்த பாஜகவினர்.. பரபர காரணம்
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக இந்த முறை எப்படியாவது தனது வாக்கு வங்கியை உயர்த்தும் முடிவில் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதனால் பாஜகவினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முக்கியமாக கொங்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பாஜகவினர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நானும் இஸ்லாமிய பெண்தான்..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதில்லை..பார்த்ததுமில்லை -பாஜக குஷ்பு கருத்து
பாஜக கார்த்திக்
இந்த நிலையில் பாஜக சார்பாக கோவை செல்வபுரத்தில் 76வது வார்டில் பாஜக சார்பாக கார்த்திக் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். நேற்று இவர் பாஜக சார்பாக தொண்டர்களுடன் சேர்ந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து இருக்கிறார். அப்போது தெரு ஒன்றை கடக்கும் போது இவர் மீது அங்கிருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு சாலை ஓரம் கிடந்த குப்பைகளையும் வீசி சிலர் தாக்கி உள்ளனர்.
கோவை செல்வபுரம்
பாஜக வேட்பாளர் கார்த்திக் மீது இப்படி திடீரென தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை. என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னுடைய பிரசாரத்தை தடுக்க வேண்டும். என்னை பிரச்சாரம் செய்ய விடமால் முடக்க வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் இப்படி கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர் என்று கார்த்திக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்வீசி தாக்குதல்
இந்த நிலையில் இன்று கார்த்திக் செல்வபுரத்தில் பிரச்சாரம் செய்ய ஹெல்மெட்டோடு வந்தார். தலையில் கற்களை வைத்து தாக்க கூடாது என்பதால் கார்த்திக் ஹெல்மெட் அணிந்தபடி பிரச்சாரம் செய்ய வந்தார். கார்த்திக்கோடு சேர்த்து மற்ற பாஜக நிர்வாகிகளும் ஹெல்மெட் அணிந்து வந்து பிரச்சாரம் செய்தனர். 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் கார்த்திக்கோடு ஹெல்மெட் அணிந்தபடி வந்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.
ஹெல்மெட்
கையில் தாமரை பூ, தலையில் ஹெல்மெட் அணிந்து பாஜகவினர் வாக்கு கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. என்னை சில மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பாதுகாப்பு கருதி நான் இப்போது ஹெல்மெட் அணிந்து வந்துள்ளேன் என்று கார்த்திக் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.