என் ஆபீஸை அபகரித்து சேவை மையம்.. அண்ணாமலைக்கு நேரடி தொடர்பு.. பாஜக நிர்வாகி பரபர புகார்!
கோவை : தனது அலுவலகத்தை அபகரித்து பாஜகவினர் சேவை மையம் தொடங்கியதாகவும், தனது அலுவலகம் அபகரிக்கப்பட்டதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாகவும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உணவு நிறுவனம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. இவர் பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது அலுவலகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் என்ற பெயரில் நடத்துவதாக அண்ணாதுரை கோவை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாகவும், வழக்கு நிலுவையில் உள்ளபோதே தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அள்ளிச் சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் அண்ணாதுரை.
தான் கோவையில் வைத்திருக்கும் அலுவலகம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த கட்டிட முதலாளி, பாஜக மாநில தலைவர் அண்னாமலையை சந்தித்தார். அங்கிருந்து மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மூலம் எனது அலுவலகத்தில் பூட்டை உடைத்து அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் அள்ளிச் சென்றுவிட்டனர் என்று புகார் கூறியுள்ளார்.

மேலும், அங்கு பாஜக கொடியை ஏற்றி, சேவை மையம் என போர்டு வைத்துள்ளனர். அவர்கள் இப்படித்தான் சேவை செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் நான் கட்சியிலேயே சேர்ந்திருக்க மாட்டேன். நான் சென்று கேட்டால், என்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது அலுவலகம் அபகரிக்கப்பட்டதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாகவும், அண்ணாமலை சொல்லித்தான் பாஜக மாவட்ட தலைவர் எனது அலுவலகத்தை சூறையாடி பொருட்களை அள்ளிச் சென்றதாகவும் அண்ணாதுரை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications