கோவை வடக்கில் தலை விரித்தாடும் பாஜக கோஷ்டி பிரச்சனை.. ரெட் கார்டு கொடுத்த ஆர்எஸ்எஸ்
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. கோவை வடக்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளின் செயல்பாட்டில் ஆர்எஸ்எஸ் அதிருப்தியடைந்துள்ளனர். பாஜகவினரை ஆர்எஸ்எஸ் எச்சரித்திருப்பதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசன், திமுகவில் துரை செந்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியில் நர்மதா, தவெகவில் சம்பத்குமார் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கோவை வடக்கில் தான் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

கோவை வடக்கு தொகுதி
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி, இந்தமுறை வடக்கு தொகுதியில் போட்டியிட்டிருப்பதால் அங்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் வானதியை எதிர்த்து திமுக களமிறங்கவில்லை. கோவையில் பாஜகவை வெற்றி பெற வைக்க கூடாது என்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிராக திமுக களமிறங்கியது.
அதேபோல இந்தமுறை வானதிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கு வானதி சீனிவாசன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிமுக பலமாக உள்ள பகுதி என்பதால் அங்கு திமுகவுக்கு கடுமையான போட்டி இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் வானதி சீனிவாசனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, அதிமுகவின் உள்கட்சி அரசியல் அங்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகிகள் மீது புகார்
மறுபக்கம் பாஜகவில் நிலவும் உள்கட்சி பூசலும் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவரும் சீட்டுக்காக போட்டி போட்டனர். கடைசியில் பாஜக தலைமை வானதிக்கு தொகுதியை ஒதுக்கினார். இதில் அண்ணாமலை அதிருப்தியடைந்தாலும், வானதிக்காக அவர் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பெரிதாக வேலை செய்யவில்லையாம். மேலும் கோவை பாஜகவில் ஏராளமான கோஷ்டி பூசல் இருப்பதால் நிர்வாகிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் தேர்தல் பணிகளில் அங்கு பின்னடைவு ஏற்பட்டது. தொகுதிக்குள் தவெக பணி செய்தளவுக்கு கூட பாஜகவினர் வேலை செய்யவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை
வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அந்த தொகுதி நிலவரம் குறித்து ஆர்எஸ்எஸ் ஆய்வு செய்துள்ளனர். இதற்காக நடைபெற்ற ரகசிய மீட்டிங்கில், பகுதி வாரியாக பாஜகவின் செயல்பாடுகள், எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். அப்போது உள்கட்சி பிரச்சனை குறித்தும் பேசப்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதி பாஜக நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. நிர்வாகிகள் தனித்தனி அணிகளாக செயல்படுகிறார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. இதே நிலை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக நிர்வாகிகளை ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர்கள் எச்சரித்துள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications