தி க்ரைம் முன்னேற்ற கழகம்.. திமுகவில் ரவுடிகள்! ஜாபர் சாதிக் முதல் காளியப்பன் வரை! அண்ணாமலை அட்டாக்!
கோவை: பாஜகவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று ஊரில் உள்ளவர்கள் பெயரை எல்லாம் பாஜக கணக்கில் திமுகவினர் சேர்த்து வருவதாக கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவில் இருப்பவர்களின் குற்ற பின்னணிகள் குறித்து தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்டையும் வெளியிட்டுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுடனான சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பாஜக நீக்கி உள்ளது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்த தகவல்களை மாநில தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட தலைமையின் அதிகாரமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இதற்கான புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்த உள்ளது.
இதேபோல் பாஜகவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் நீக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை திமுகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்கள் குறித்த அறிக்கையை இன்று வெளியிடுகிறேன் என கூறி தி கிரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்டை தனது செல்போன் மூலம் வெளியிட்டு, இதில் சுமார் 112 பேர் முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர் என்றார்,
மொத்தம் 18 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் திமுக பிரமுகர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவை ஆதாரத்தோடு உள்ளது. போதைப் பொருள் கடத்தல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடையவர்கள், காவல்துறையினரை தாக்கியவர்கள், அரசியல் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், வணிகர்களிடம் பணம் பெற்றவர்கள் என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட திமுகவினர் குறித்த அறிக்கை இது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கருதினால் முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கலாம். அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக ஆகும்போது திமுகவின் நிலைமையை மக்களே அறிந்து கொள்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து திருச்சியில் நடந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். ராமருக்கு செருப்பு மாலை போட்ட இயக்கத்தை பின்பற்றி வந்த திமுக இன்று சமத்துவத்தையும், சமூக நீதியையும் பேசியது ராமர் காலம் என கூறி உள்ளது. இதைதான் நாங்களும் ராமராஜ்ஜியம் என்கிறோம்.

இது குறித்த சட்ட அமைச்சரின் கருத்து ராமருக்கு செருப்பு மாலை இட்டதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் கருத்தாகவே பார்க்கிறோம். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் பணியில் மத்திய வெளி உறவு அமைச்சகம் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்கும் பணியினை மட்டுமே செய்து வருகின்றனர். சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக சொல்லும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவில் உள்ள சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான பல்கலைக்கழகங்களை அதிகமாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications