ரஃபேல் வாட்ச் தான் திருப்புமுனை.. 2024ல் பாஜகவுக்கு 25 தொகுதிகளில் வெற்றி.. அண்ணாமலை சூசகம்!
கோவை: ரஃபேல் வாட்ச் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 25 எம்பி-க்கள் கிடைப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 25 எம்பி-க்கள் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம்.

ரஃபேல் வாட்ச் மூலம் வெற்றி
அதற்கான அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் இப்போது ரஃபேல் வாட்ச் மூலம் 25 எம்பி-க்கள் வெல்லலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் ஊழல் பற்றி பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஊழலை பற்றி பேசுவது முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இங்கு வரும் போது ரஃபேல் வாட்சிற்கான பில்லை, பிப்ரவரியில் கொடுக்கிறீர்களா அல்லது ஏப்ரலில் கொடுக்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன், ரஃபேல் வாட்ச் பில் என்னிடம் தான் உள்ளது.

வாட்ச் வாங்கிய ரசீது
எப்போது ரஃபேல் வாட்ச் விவகாரம் பற்றி டீ கடையில் பேசுகிறார்களோ, அப்போது தான் பில்லை வெளியிடுவேன். டீ கடையில் எப்போது இதுகுறித்து பேசுகிறார்களோ, அப்போது தமிழகத்தில் அரசியல் புரட்சி நடந்ததாக அர்த்தம். தற்போது ஊழல் குறித்து பேசுவதற்கு லட்டு போல் பொன்னான வாய்ப்பை திமுகவினர் கொடுத்துள்ளார்கள். கருணாநிதி இருந்திருந்தால், நமக்கு இதுபோன்று வாய்ப்பு கிடைத்திருக்காது. ரஃபேல் வாட்ச் பற்றி ஏராளமான செய்திகளை பரவ விடுகிறார்கள்.

திமுக ஊழல் பட்டியல்
2017ல் விற்று தீர்ந்த வாட்ச்சை, எப்படி 2021ல் வாங்கினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்போது ஒன்றிரண்டு அமைச்சர்கள் தான் பேசுகிறார்கள். இன்னும் ஏராளமான அமைச்சர்கள் பேசிய பின், வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிடுவேன். வாட்ச் வெளியிடும் நாளில், திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம். அதுமட்டுமல்லாமல், மக்கள் புகாரளிக்க ஒரு தளத்தையும், செயலியையும் வெளியிடுவோம். திமுகவின் ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு மட்டுமே தகுதி உள்ளது.

திமுகவுக்கு முடிவுரை
பாஜகவை போல் களத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் யாரும் செய்யவில்லை. கையில் இருக்கும் பணத்தை வைத்து நாம் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். Do or die சூழலில் தமிழகத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. திமுகவிற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும். 2024ல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும்.

பூத் கமிட்டி
25 எம்பி-க்களுக்கு மேல் பாஜக வென்றுவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சியை நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் பாஜகவின் வெற்றியை தீர்மானிப்பது உங்களுக்கு மட்டுமே உள்ளது. அதற்கான அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டியை முழுமைப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.












Click it and Unblock the Notifications