கோவை செங்கல் சூளை அதிபர்களுக்கு சிக்கல்.. 900 கோடி அபராதம்.. மேலிடத்தில் இருந்து நேரடியாக உத்தரவு
கோவை: கோவை மாவட்டம் சின்னத்தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு சுமார் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் சின்னத்தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சட்டவிரோதமாக சுமார் 1.10 கோடி கன மீட்டர் அளவு மண் அள்ளப்பட்டதாக புகார்கள் உள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த செங்கல் சூளைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டிருக்கிறது..

இதற்கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் புதுடெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (டெரி) நிபுணர்கள் சுமார் 4 மாதங்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்து இருந்தார்கள். இதனிடையே அபராத தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு சுமார் ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையில் ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் எவ்வளவு அபராத தொகை என்று தனித்தனியாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்த அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உயர்நீதிமன்றம் சமர்ப்பிக்கும் என்றும், பின்னர் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஒட்டுமொத்த அபராத தொகையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும் என்று கடந்த சில மாதம் முன்பு வலியுறுத்தியிருந்தது. இதுபற்றி நீதிபதி பரதன் சக்கரவர்த்தி கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், விசாரணையின்போது குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை யார் யாருக்கு இதில் என்னென்ன பங்கு உள்ளது என லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது; ஆனால் இவ்வழக்கில் சுற்றுச்சூழல் துறை ஆணையின் செயல் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications