செல்லாது.. செல்லாது.. எல்லா கோட்டையும் அழிங்க.. புது பிரச்சனையை கிளப்பிய கிருஷ்ணசாமி
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகளவு நடந்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பட்டுவாடா செய்த கட்சிகளையும், தேர்தல் ஆணையத்தையும் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதிய தமிழகம் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டோம். வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. எல்லாவற்றையும் விட ஜனநாயகம் தான் உயர்ந்தது. பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆசை வார்த்தை, அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தல் அப்படி இல்லை.

ஊழல் ஒழிய வேண்டும்
ஜனநாயகமா, பண நாயகமா என்று கேட்குமளவுக்கு தமிழகம் முழுவதும் பணம் வாரி இறைக்கப்பட்டது. என்னுடைய ஒட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணபட்டுவாடா பற்றி கண்டு கொள்ளவில்லை. பணப்பட்டுவாடாவை ஒரு அங்கம் என்று தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லையா. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22 ஆம் தேதி இரவு வேட்பாளர்கள் போட்டி போட்டு பணம் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலை தொடர்ந்தால் ஏழை எளியவர்கள் அரசியலுக்கு வர முடியாது. தேர்தல் என்பது ஒரு சடங்காக இருந்துள்ளது. பணம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலை நடத்தியது போல் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல் கவலையளிக்கிறது. இதை அமைதியான தேர்தல் என்று சொல்ல முடியாது. நம் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். இது ஜனநாயக தேர்தல் அல்ல.
தேர்தல் ஆணையம் சீரமைப்பு
தேர்தல் பறக்கும் படை சரியாக செயல்படவில்லை. பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை செய்ததாக தெரியவில்லை. வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் கிடையாது. எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்
வெயில் காரணமாக மக்கள் காலை நேரத்தில் வந்து வாக்களித்திருப்பார்கள், பணபட்டுவாடாவால் மக்களை நிர்பந்தம் செய்து வாக்களிக்க வைத்திருப்பார்கள். விஜய் வருகையாலும் மக்கள் வாக்களித்திருக்கலாம். அதுமட்டுமே வாக்கு சதவீதம் உயர்வதற்கு காரணம் இல்லை. எஸ்ஐஆர் காரணமாகவும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். தேர்தல் ஆணையத்தை மறு சீரமைக்க வேண்டும்.
மோசமான நிலை
இல்லையென்றால் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்படும். சர்வதேச அமைப்புகள் இங்கு தேர்தல் முறையாக நடந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். மக்கள் பணம் வாங்கினால் எப்படி அரசியல் கட்சிகளை குறை சொல்ல முடியும். மக்களின் நிலை இந்த அளவிற்கு மோசமாக உள்ளது. மக்களை அவ்வளவு வறுமையில் வைத்துள்ளார்கள். ஒரு 500 ரூபாய்க்கு மக்களை மண்டியிட வைக்குமளவுக்கு மோசமான நிலையை உருவாக்கியுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications