கடனால் சீர்குலைந்த குடும்பம்! கோவை சென்று மகன், மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கணவன் மாயம்
கோவை: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது மகன் மற்றும் மகளுடன் கோவை அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் கணவர் மாயமானதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. 50 வயதான இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (வயது 45). இவர்களுக்கு யுவராஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகள் உண்டு. யுவராஜ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். மகள் ஜனனி 10 ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

கடன் தொல்லையால் கணவர் மாயம்: தட்சிணாமூர்த்தி எலக்ட்ரீசியன் என்பதால் போதிய அளவு வருமானம் இன்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு தேவைக்காக அவ்வப்போது கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தட்சிணாமூர்த்தி தவித்து வந்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்களும் பணத்தை அடிக்கடி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 28 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி வரலட்சுமி இது தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை தேடி வந்தனர். ஆனால் கணவர் திரும்பி வரவில்லை.
வீட்டை விட்டு புறப்பட்டனர்: இந்த நிலையில் 2 குழந்தைகளோடு வரலட்சுமி சாப்பாடுக்கு கூட பணம் இன்றி தவித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் அவரது தாய் தாராபாய் தான் கூட இருந்து கவனித்து வந்துள்ளார். எனினும் கணவர் சென்றதில் இருந்து வரலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன் தாயார் தாராபாயிடம் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வரலட்சுமி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு புறப்பட்டார்.
ஆனால் அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தாராபாய் விசாரித்து வந்தார். மேலும் உறவினர்களிடமும் கேட்டு விசாரித்தார். எங்கும் தகவல் இல்லாததால் தாராபாயும், என் மகள், பேரன், பேத்தி 3 பேரையும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
கோவையில் பிணமாக மீட்பு: இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவை அருகே தண்டவாளத்தில் பெண் உள்பட 3 பேரின் உடல் சிதைந்த நிலையில் ரயில்வே போலீசார் மீட்டனர். இதையடுத்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், இது சென்னையில் காணாமல் போன வரலட்சுமி மற்றும் அவரது மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை: விசாரணையில், கையில் பணம் இல்லாததால் கோவிலுக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு தனது குழந்தைகளுடன் கோவைக்கு வரலட்சுமி வந்துள்ளார். போத்தனூர் பகுதியில் வந்து இறங்கிய அவர், அடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் குழந்தைகளுடன் தவித்து உள்ளார். மேலும் அவரிடம் பணம் இல்லாததால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியவில்லை..
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், தவித்த வரலட்சுமி, தனது குழந்தைகளுடன் நஞ்சுண்டாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் வந்து நின்றார். தொடர்ந்து அந்த வழியாக வந்த கேரளா சென்ற ரயிலில் தனது குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது icallக்கு (Free · Confidential · Hours: 10:00 am to 8:00 pm, Monday to Saturday) 091529 87821 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications