திமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்!
கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கொலை கொள்ளை தலைதூக்கும் என கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Recommended Video
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பிரச்சார பயணமாக கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி, இன்று காலை கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர் ராஜவீதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக.,வை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.
முதல்வர் ஆவேச பிரசாரம்
அவர் பேசியதாவது: தேர்தல் வரும் சூழலில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பெண்களை அமரவைத்து குறைகளை கேட்பது போல திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். கோவையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், குறைகளை சுட்டிக்காட்டி பேசிய பெண் திமுக. வினரால் எப்படி எல்லாம் தாக்கப்பட்டார் என்ற செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதுதான் திமுக நடத்தும் கிராம சபை கூட்டம்.
ஸ்டாலின் குழப்புகிறார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? ஒரு நன்மை கூட திமுக செய்யவில்லை. அதிமுக தலைவர்களை விமர்சிப்பதும், கவர்ச்சி வார்த்தைகளைப் பேசி மக்களை குழப்பவும் தான் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கான காரணம்.
நாங்கள் குறை சொல்லவில்லை
ஒவ்வொரு இடத்திலும் மக்கள் திமுக.,வை கண்டு எள்ளி நகையாடி சிரிக்கின்றனர் என்பதை ஸ்டாலினால் உணர முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளை ஏற்று அதற்கு பதில் கூறுவது தான் ஒரு தலைவனுக்கு அழகு. ஆனால்
அந்த நாகரீகத்தை கூட ஸ்டாலினால் கடைபிடிக்க முடியவில்லை.
திமுக.,வினர் குறைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் என்னென்ன செய்துள்ளோம் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறோம் என்று கூறி வாக்கு கேட்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தால்
சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது. திமுக ஆட்சி போல் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லை. வியாபாரிகள் தொழிலதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்கின்றனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கொலை கொள்ளை அதிகரித்து மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.
பொய் அறிக்கை
சமீபத்தில் திமுக தலைவர் ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்தார். அதில் திருநெல்வேலி தென்காசி சாலை அமைப்பதில் ரூ.450 கோடி ஊழல் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சாலை அமைக்க டெண்டர்விடவும் இல்லை, நிதி ஒதுக்கவும் இல்லை இப்படிப்பட்ட பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார் திமுக தலைவர்.
அதிமுக அரசுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. யாரோ எழுதிக்கொடுப்பதை வைத்து பேசி வருகிறார் ஸ்டாலின். துண்டு சீட்டு இல்லாமல் நாங்கள் பேசத் தயார். குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.