அடுத்த மாதம் செம்மொழி பூங்கா.. விரைவில் பெரியார் நூலகம், ஸ்டேடியம்.. கோவையில் ஸ்டாலின் அப்டேட்!
கோவை: கோவை அவினாசியில் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் பெரியார் நூலகம் மற்றும் கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றையும் கட்டி முடித்து திறக்கப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். கோவையில் உள்ள அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையிலான 10.1 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 3வது மிகப்பெரிய உயர்மட்ட மேம்பாலமாக இந்த மேம்பாலம் பெருமையை பெற்றுள்ளது. இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதன் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளுக்கும் 10 நிமிடங்களில் பொதுமக்கள் சென்றுவிட முடியும். அதேபோல் கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 42 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தொழில் மாநாடுகள் நடத்துவதன் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் துறை மட்டுமல்லாமல் மொத்த மாநிலமும் வளர்ச்சி அடைகிறது. உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பது தான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகியுள்ளன.
புத்தொழில் நிறுவனங்களில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 4 ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கோவையில் அடுத்த மாதம் ரூ.175 கோடியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவை திறக்க உள்ளோம். அடுத்ததாக விரைவில் பெரியார் நூலகம், கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றை திறக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் கோவையில் அடுத்தடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருவது பலரின் கவனத்தை திருப்பி இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கோவையில் திமுகவால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. அந்த அளவிற்கு அதிமுக மற்றும் பாஜக வலுவாக உள்ளது.
இம்முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இதன் காரணமாக மற்ற மாவட்டங்களை விடவும் கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் திமுகவின் பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications