கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை! இருப்பினும் விட்டுத்தராத முதல்வர் ஸ்டாலின்!
கோவை: கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை என்றாலும் கூட அந்த மாவட்டத்தையும் மக்களையும் விட்டுக்கொடுக்காமல் பேசி புகழ்ந்து தள்ளியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கோவை மாவட்டத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அரசு நடத்துவதாக அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அந்தக் குற்றச்சாட்டை தவிடு பொடியாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பேசிய அவர் கோவையையும்,கோவை மக்களையும் பற்றி பேசிய விவரம் வருமாறு;

இதமான தட்பவெப்பம்
இதமான தட்பவெப்பமும் - மிதமான குளிர்ச்சியும் கொண்ட நகரம் இந்தக் கோவை. இது மக்களின் பழக்க வழக்கங்களிலும் நிச்சயமாகத் தெரியும். அந்த வகையில்
குணத்தால் -மனத்தால் இதமான கோவைக்கு நான் வந்திருக்கிறேன். தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் என்னவென்று கேட்டீர்களென்றால் அது கோவை மாநகரம் தான்.

கோவை மக்கள்
ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் இந்த கோவை நகரம் தான். இந்தத் தொழில்தான் என சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக இந்தக் கோவை இருக்கிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்தக் கோவை.

கிரைண்டர் தொழில்
கோயம்புத்தூரில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையான வெட் கிரைண்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு "கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்" என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

வேகமாக வளர்கிறது
தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாகவும் இந்த கோவை மாநகரம் உருபெற்றுள்ளது. இந்நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம், உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை இந்த நகரம் தற்போது பிடித்திருக்கிறது.

முக்கியத் தூண்
நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் நடைபெற்ற நான்கு மாநாடுகளில் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தொழில் துறையினுடைய மிக முக்கிய தூண்களில் ஒன்று இந்தக் கோவை மாவட்டம் என்பதற்காகத்தான்.

கோவையின் பங்களிப்பு
தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வளம்மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில், புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும்
மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக (New Hub for Emerging Technologies) கோயம்புத்தூர் உருவாக்கப்படும்.












Click it and Unblock the Notifications