பிஎஸ்ஜி கல்லூரி என்றால் சும்மாவா? தமிழுக்காக உயிர்கொடுத்த மாணவர் ஒருவர் படித்த கல்லூரி இது -ஸ்டாலின்
கோவை: தமிழுக்காக உயிர்கொடுத்த மாணவர் ஒருவர் படித்த கல்லூரி பி.எஸ்.ஜி.கல்லூரி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி.கல்லூரியின் பவள விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் அக்கல்லூரியின் சிறப்பையும் அதில் படித்து இன்று உலகம் முழுவதும் சிறந்த நிலையில் இருக்கக்கூடியவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

பி.எஸ்.ஜி கல்லூரி
PSG - என்பதற்கு நான் காணக்கூடிய பொருள் என்பது P - people S - service G - Good - என்பதே.மக்களுக்கு உண்மையான சேவையை சிறப்பாகச் செய்யும் நிறுவனம் இது என்பதால்தான், PSG என்று அழைக்கப்படுவதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், அதுதான் உண்மை.
75-ஆவது ஆண்டு பவளவிழாவை இன்று நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

தமிழுக்காக உயிர்
1965-ஆம் ஆண்டு, ஆதிக்க இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் - தனது வீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தியது. ஐம்பது நாட்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தமிழ்க்காப்புப் போராட்டம் நடந்தது. தமிழைக் காக்கத், தனது உடலுக்குத் தானே தீமூட்டியும், நஞ்சுண்டும் - தமிழ்நாட்டு மொழிக்காவலர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் பீளமேடு தண்டாயுதபாணி. எதற்காக இதை குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அவர் PSG கல்லூரி மாணவர். தமிழுக்காக உயிர்கொடுத்த மாணவர் ஒருவர் படித்த கல்லூரி இந்தக் கல்லூரி.

உலகப் புகழ்பெற்ற
தமிழ்நாட்டில் பிறந்து, இன்று உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக உயர்ந்து நிற்கக்கூடியவர் H.C.L. நிறுவனத்தின் தலைவர் சிவ்நாடார் அவர்கள். அவர் படித்த கல்லூரியும் இதுதான்.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், திட்ட இயக்குநராக இருந்து - இந்தியாவின் அறிவியல் ஆற்றலை விண்ணுக்கு உணர்த்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் படித்த கல்லூரியும் இந்தக் கல்லூரி தான். இந்தக் கல்லூரியினுடைய முன்னாள் மாணவர் தான் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

PSG அறநிலையம்
PSG அறநிலையமானது கல்வி, மருத்துவம், ஆன்மீகம், தொழில்நுட்பம், சமூகசேவை எனப் பல பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனிதநேயத்தின் கிளைகள்தான்.இந்தக் கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் A++ தகுதி, பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புத் தகுதி பெற்ற முதன்மையான கல்லூரியாக இருக்கிறது. பல்வேறு STAR தகுதியைப் பெற்றிருக்கிறது.

கல்லூரி தரவரிசை
கல்லூரிகளின் தரவரிசையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.NIRF தர வரிசையில், நாட்டிலேயே 20-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.
இவை அனைத்துக்கும் மேலாக, மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் - அரசு ஆணைகளின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறீர்கள்.அதேபோல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் முறையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருகிறீர்கள்.

மகளிருக்கு சிறப்புத் திட்டங்கள்
மகளிருக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறீர்கள். 60 விழுக்காடு மாணவியர்கள் படிப்பதாகவும் - ஆசிரியர்களில்
60 விழுக்காடு, பெண் ஆசிரியர்களாக இருப்பதும் உள்ளபடியே பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.கிராமங்களைத் தத்தெடுத்து, அந்தந்த கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருவதை அறிந்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

75,000 பானைகள்
பானை செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தித் தொழில் வாய்ப்பைப் பெருக்கக்கூடிய நிலையில், இந்தக் கல்லூரியின் 75-வது ஆண்டு பவளவிழாவினை முன்னிட்டு 75,000 பானைகளைச் செய்ய வைத்து, PSG கலை அறிவியல் கல்லூரி இன்றைக்கு கின்னஸ் உலக சாதனை (Guinness Record) படைத்திருக்கிறது. இதனால் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பல்வேறு வகைகளில் பயன்பெற்றிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.












Click it and Unblock the Notifications