கோவையில் ஸ்டாலின்.. வந்தாச்சு திமுக எம்.பி! மக்கள் மனம் குளிர முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு!
கோவை: திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் விழாவில், கோவை மக்களுக்கான திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா, கோவை கொடீசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
திமுக முப்பெரும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. விழா மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருபுறம் அமர்வதற்கும், தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 எம்.பி.க்கள் அமர்வதற்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானம் முழுவதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் திமுக நேரடியாக வென்றுள்ள நிலையில் இந்த முப்பெரும் விழா நடைபெற உள்ளதால் கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திற்குள் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மதிவேந்தன், ராமச்சந்திரன் மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தனியார் ஹோட்டலில் தங்கும் அவர் இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின் கொடீசியா அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் கோவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ள நேற்று கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒண்டிப்புதூர் பகுதியில் பார்வையிட்டார்.
கோவை தொகுதிக்கு திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்த நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுகவைச் சேர்ந்தவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில், கோவை மக்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications