மீன் பிடிக்க போன கோவை சிறுவனை கல்லால் அடித்து.. 15 வயது நண்பன் பகீர்.. சிசிடிவியில் பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை அருகே 13 வயது சிறுவன் சக நண்பர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வாய்க்கால் ஓரம் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மீன் பிடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட சிறு தகராறில், தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டு சிறுவர்கள் ஆடிய கடத்தல் நாடகம் போலீசாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.. சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த இந்த கொடூர கொலை சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் உலுக்கியுள்ளது.. என்ன நடந்தது?
கோவை மாவட்டம் இருகூர் நியூகாலனி பகுதியை சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் ரித்தீஷ்.. 7ம் வகுப்பு வரை படித்துள்ள இந்த சிறுவன் கடந்த 16ம் தேதி அன்று தனது நண்பர்களான 15 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகேயுள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளான்.

மீன் பிடிக்க போன கோவை சிறுவன்
ஆனால் நீண்ட நேரமாகியும் ரித்தீஷ் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர்.. அதற்கு அவர்கள், தாங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது யாரோ பைக்கில் வந்ததாகவும், அவருடன் ரித்தீஷ் சென்றுவிட்டதாகவும் சொல்லி நாடகமாடியுள்ளனர்..
இதைக்கேட்டு பதறிப்போன பெற்றோர், தங்களது மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பயந்து, உடனடியாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.. ஆனால் சிறுவர்கள் சொன்னது போல பைக்கில் ரித்தீஷ் செல்லும் காட்சிகள் எதுவும் அதில் பதிவாகவில்லை.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், ரித்தீஷுடன் சென்ற அந்த 2 சிறுவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்..
கல்லால் அடித்து கொலை
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லவும், போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 பேருமே உண்மையை ஒப்புக் கொண்டனர்.
வாய்க்காலில் மீன் பிடிக்கும்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாம். அதாவது நண்பர்களில் ஒருவரின் தாயை, ரித்தீஷ் தவறாக பேசினாராம்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுவன், அங்கு கிடந்த காலி பாட்டிலை எடுத்து ரித்தீஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளான்.. இதனால் ரித்தீஷ் மயங்கி கீழே விழுந்ததும், கொடூரமாக அவனது தலையில், பெரிய கல்லை தூக்கி போட்டு கொலையும் செய்துள்ளான்.
காலி பாட்டில் - போஸ்ட் மார்ட்டம்
இந்த கொலையை தடுக்காமல், அதனை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாராம் மற்றொரு 13 வயது சிறுவன்.. இறுதியில் ரித்தீஷ் இறந்ததை உறுதி செய்துகொண்டு அந்த 2 சிறுவர்களும் சடலத்தை வாய்க்கால் ஓரத்திலேயே மறைத்துவிட்டு கேஷூவலாக அவரவர் வீட்டுக்கு வந்து படுத்துள்ளனர்.
கொலை நடந்ததை கூடவே இருந்து பார்த்தது மட்டுமில்லாமல், பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உண்மையை மறைத்து நாடகமாடி கொலைக்கு உடந்தையாக இருந்ததால் 13 வயது சிறுவனையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.. கொலைக்கு பயன்படுத்திய கல் மற்றும் காலி பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், பாலத்துக்கு அடியில் கிடந்த ரித்தீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
சிக்கிய 2 சிறுவர்கள்
ஆனால், இதைக்கேட்டு கொந்தளித்து போன பெற்றோரும், உறவினர்களும் ரித்திஷின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு, பெற்றோரும், உறவினரும் சிங்காநல்லூர் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.. பிறகு அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தானாக முன்வந்து இதுகுறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளது. வரும் 15ம் தேதிக்குள் சிறுவன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. நண்பனை கொன்றுவிட்டு சிறுவர்கள் ஆடிய கடத்தல் நாடகம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!












Click it and Unblock the Notifications