பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. கோவை -பெங்களூர் வந்தே பாரத் குறித்து குமுறும் மக்கள்
கோவை: அதிகாலை 5 மணிக்கு எப்படி சார் வர முடியும்...ஆட்டோ கிடைக்குமா, பேருந்து கிடைக்குமா அல்லது அதிகாலை 5 மணிக்கு எப்படித்தான் வந்தே பாரத் ரயிலை பிடிக்க வரமுடியும். இதற்கு பேசாமல் பருந்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம் என கோவை பெங்களூர் வந்தே பாரத் குறித்து கோவையைச் சேர்ந்தவர்கள் குமுறுகிறார்கள்..
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-மைசூர் (பெங்களூர் வழியாக) 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது நான்காவதாக கோவை பெங்களூரு இடையே இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக பங்கேற்று வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் இன்று மட்டும் காலை 11 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூருக்கு 11.45 மணிக்கும், ஈரோட்டிற்கு மதியம் 12.32 மணிக்கும், சேலத்திற்கு 1.29 மணிக்கும், தர்மபுரிக்கு 2.51 மணிக்கும், ஓசூருக்கு மாலை 4.23 மணிக்கும், பெங்களூருவுக்கு 6.30 மணிக்கும் சென்றடைகிறது.
ஆனால் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தினமும் காலை 5 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நகரத்திற்கு காலை 11.30 மணிக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
கோவை பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணமாக சாதாரண பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1,025ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1,910ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் வருகிற 1ந் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளது.
கோவை டூ பெங்களூர் ரூட்டில் ஏற்கனவே செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்தபட்ச நேரமாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5.40 நிமிடத்தில் போய்விட முடியும்.
Most anticipated #Coimbatore - #Bangalore VB is around the corner. But none of the #Coimbatorians are going to use this 5am VB.
— Namma Kovai (@NammaCoimbatore) December 29, 2023
1) Earliest VB departure in the country @5am for the shortest distance of 380 km.
2) Slowest VB in India - avg 57 kmph. Rework the time table pls. pic.twitter.com/Pn6yrvVg4c
தற்போது தனியார் ஆம்னி பஸ்களில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் செல்ல 7 மணி நேரம் ஆகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதால் ரயிலுக்கு வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கோவை பெங்களூர் வந்தே பாரத் 380 கிமீ தூரத்தை கடக்க 5.40 நிமிடம் என்பது மிக அதிகம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது சராசரியாக 57 கிமீ வேகத்தில் தான் கோவை வந்தே பாரத் போகிறதா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். சேலத்தில் இருந்து பெங்களூரு சென்றடைய கேரள இன்டர் சிட்டி ரயில் 3¾ மணி நேரம் எடுத்து கொள்கிறது. ஆனால் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் இந்த தூரத்தை கடக்க 4¼ மணி நேரம் என கூடுதலாக ½ மணி நேரம் எடுக்கிறது. எனவே இந்த நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையத்தை சென்றடைவது கடினம். ஏனெனில் பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி என எதுவும் அந்த நேரத்தில் இருக்காது. எனவே அதிகாலை 5 மணிக்கு என்பதற்கு பதிலாக காலை 6 மணிக்கு மேல் புறப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தினமும் காலை 5.45 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. அந்த ரயிலில் கட்டணம் வெறும் 180 மற்றும் ஏசி கட்டணம் 620 ஆக உள்ளது. அதற்கே வரவேற்பு இல்லை.. அந்த ரயில் பெரும்பாலான நாட்கள் காற்று வாங்குகிறது. இந்நிலையில் வெறும் ஒரு மணி நேரம் முன்பாக செல்லும் வந்தே பாரத் ரயிலில் செல்வதை எப்படி விரும்புவார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கோவை பெங்களூர் இடையே செல்லும் வந்தேபாரத் ரயிலின் வேகத்தை அதிகரித்து, இன்னும் ஒரு மணி நேரம் அளவிற்கு பயண நேரத்தை குறைத்து, காலை 6 மணிக்கு மேல் ரயிலை இயக்கினால் நல்ல வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் கோவைவாசிகள்.












Click it and Unblock the Notifications