கோவையில் பாஜக பிரமுகரை சரமாரியாக வெளுத்த பவுன்சர்கள்.. சக மாவட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது!
கோவை: கோவையில் பாஜக நிர்வாகி ஜான்சன், பவுன்சர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய போலீசார் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ரெயின்போ ரமேஷை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் திடீரென பல இடங்களில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள் மட்டும் இலக்கு வைத்து தாக்கப்பட்டன. திடீர் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன; அதேபோல் பாஜக நிர்வாகிகள் திடீரென தாக்கப்பட்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான புகார்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சக நிர்வாகிகள் தாக்குதல்
அதேநேரத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பு நிர்வாகிகள் சிலர், இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கட்சி மற்றும் இயக்கங்களில் எதிராக செயல்படுவர்களை பழிவாங்கவும் செய்தனர். இதனால் இச்சம்பவங்கள் அனைத்தும் போலீசாருக்கு கடும் சவாலாகவும் இருந்தன. அப்படி ஒரு சம்பவம்தான் கோவையில் நடைபெற்றது.

பாஜக நிர்வாகிக்கு சரமாரி உதை
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பப்பீஸ் ஹோட்டலுக்கு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன், அவரது மகன் டேவிட் உள்ளோர் பங்கேற்றனர். ஆனால் பப்பீஸ் ஹோட்டல் ஊழியர்களோ, பெண்களுடன் ஜோடியாக வந்தால் மட்டுமே உள்ளே அனுமதி என கறார் காட்டியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நான் யார் தெரியுமா? என ஜான்சன் கெத்து காட்டியிருக்கிறார். அந்த நேரத்தில் ஹோட்டலில் இருந்த பவுன்சர்கள், சரமாரியாக ஜான்சனையும் அவரது மகன் டேவிட்டையும் வெளுத்தெடுத்திருக்கின்றனர். பப்பீஸ் ஹோட்டல் மேலாளர் விஷ்ணு பாரதி தந்த புகாரில் ஜான்சன் மீது ;போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வெளியானது வீடியோ
கோவை பப்பீஸ் ஹோட்டலில் ஜான்சனும் அவரது மகன் டேவிட்டும் அடிவாங்கும் வீடியோ பதிவுகள் வெளியாகின. இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. ஹோட்டல் மேலாளர் விஷ்ணு பாரதி முன்னிலையில்தான் ஜான்சன் பவுன்சர்களிடம் அடிவாங்கியது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

திருட்டு புகார்
இதனைத் தொடர்ந்து ஜான்சன் ஒரு புகாரை போலீசில் கொடுத்தார். அதில் மகன் டேவிட்டின் பிறந்த நாளை ரூ25,000 செலுத்தி கொண்டாட சென்றோம். ஆனால் பிறந்த நாள் நடத்தப்படும் இடத்தை பப்பீஸ் ஹோட்டல் நிர்வாகம் எங்களுக்கு தெரியப்படுத்த மறுத்தது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் பவுன்சர்கள் எங்களைத் தாக்கினர். என் மகன் டேவிட்டிடம் இருந்த வைரமோதிரமும் திருடப்பட்டுவிட்டது என கூறியிருந்தார்.

திடீர் திருப்பம்
ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பப்பீஸ் ஹோட்டலில் பவுன்சராக பணிபுரிந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் என்பவரை அதிரடியாக கைது செய்தது. கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைதுக்கு எதிரான போராட்டத்தில் 15 நாட்கள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்தான் ரமேஷ். இவர் ரெயின்போ ரமேஷ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். பாஜகவில் இருந்த உட்கட்சி முன்விரோதத்தால் ஜான்சனை பவுன்சர்கள் மூலம் ரெயின்போ ரமேஷ் தாக்கினாரா? அல்லது ஜான்சன் கூறியதைப் போல பிறந்த நாள் தகராறில்தான் இந்த மோதல் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications