இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங்
கோவை: கோவையைச் சேர்ந்த வாகன உரிமையாளருக்கு சொந்தமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பெயர் எழுதிய பஸ் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பஸ்ஸில் எழுதிய வாசகங்கள் கர்நாடகா தொடங்கி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையொட்டி வாகனங்களில் வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் எழுதினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவைபோலீஸ் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
கோவையை அடுத்த குரும்பபாளையத்தில் இருக்கும் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் அண்மையில் ஒரு தனியார் சொகுசு பஸ்சில் கர்நாடகாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அந்த பஸ்சில் மாணவர்கள் பாட்டுப் பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியாக சென்றுள்ளார்கள். அந்த பஸ் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு அருகே உள்ள பகவான்ஹால் பகுதியில் சென்றபோது திடீரென்று போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்கள்.

அப்போது கோவைச் சேர்ந்த அந்த பஸ்சின் முன்பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம் பெயர் எழுதப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் டான், அண்டர்வேர்ல்டு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தவிர பல வாசகங்களும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இடம் பெற்று இருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கர்நாடகா போலீசார் அந்த பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து டிரைவர் மற்றும் அந்த பஸ்சின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதில் இருந்த மாணவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதுகுறித்து கோவை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களில் எழுதும் வாசகங்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கக்கூடாது. அப்படி எழுதப்பட்டு இருப்பது வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகர் மற்றும் புறநகரில் வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" இவ்வாறு கூறினார்கள்.












Click it and Unblock the Notifications