"ஐயா.. என்ன இப்படி செய்துட்டீங்க".. திரண்டு வந்தவர்களை மலைக்க வைத்த "கேன்டீன்" சுப்பிரமணியம்.. சபாஷ்
கோவை கேன்டீன் சுப்பிரமணியனுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
கோவை: "ஐயா.. நீங்க இப்படி குறைந்த விலையில் சாப்பாடு போட்டீங்கன்னா எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?" என்று சுற்றுவட்டார ஹோட்டல்காரர்கள் கேன்டீன் சுப்பிரமணியிடம் கேட்டார்களாம்.. அதற்கு சுப்பிரமணியம் அதிரடியான ஒரு காரியத்தை செய்து, அந்த ஹோட்டல்காரர்களை மிரள வைத்துவிடுவாராம்!
இன்றைய சோஷியல் மீடியா முழுவதும் கோவை கேன்டீன் சுப்பிரமணியம் பற்றிதான் பேச்சாக இருக்கிறது.. இவர் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்... ஆனாலும் இவர் செய்த சேவை மக்களை பேச வைத்துவிட்டு விட்டது.

1996-ல் "சாந்தி சமூக சேவை" என்ற அறக்கட்டளையை தொடங்கி, ஏராளமான சேவைகளை செய்துவந்தவர் சுப்பிரமணியம்... கேன்டீன், ஆஸ்பத்திரி, மெடிக்கல் ஷாப் போன்றவற்றை சிறிதும் லாப நோக்கம் இல்லாமல் நடத்திவந்தார். இவர் ஆஸ்பத்திரியில், நோயாளிகளுக்கு டாக்டர் பீஸ் வெறும் 30 ரூபாய்தானாம்.. மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதில் கூட 30 சதவிகிதம் டிஸ்கவுண்ட் இருக்கிறதாம். .
மிக மிக குறைந்த விலையில், ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றினார்.. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக சாப்பாடு தந்து வருகிறார்.. ரூ.15க்கு டிபன், ரூ.20க்கு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் இது எல்லாமே வெறும் 5 ரூபாய்தானாம்.. சாப்பாடு உயர்தர ஹோட்டல்களைவிட பன்மடங்கு தரமாக இருந்திருக்கிறது.. ருசியும் அபாரமாக இருக்கவும், ஏராளமானோர் இங்கு சாப்பிட வந்து கொண்டே இருப்பார்களாம்.
இதனால் அந்த பகுதியில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள், "நீங்கள் இப்படி குறைந்த விலையில் சாப்பாடு தருவதால், எங்க ஹோட்டலுக்கு கூட்டமே வருவதில்லை.. நஷ்டம் ஆகிறது" என்று சொல்வார்களாம்.. அதற்கு சுப்பிரமணி, சாப்பாடு விலையை 25 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு குறைத்துவிட்டாராம்.. இதை பார்த்ததும், மறுபடியும் ஹோட்டல்காரர்கள் திரண்டு வந்து, "என்ன ஐயா, இப்படி செய்துட்டீங்களே" என்று கேட்டால்,இப்படி வந்து பேசினால் இன்னும் விலையை குறைப்பேன் என்பாராம்.
ஏழைகளுக்கு உணவை தரமாக, அதேசமயம் விலை குறைந்து வழங்குவதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம். ஆனால், எவ்வளவு சேவை செய்தாலும், தன் முகத்தை மீடியாவிடம் காட்டிக் கொண்டதே இல்லை... வழக்கமாக நம் மக்கள், பசிக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டவர்களை உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள்.. அந்த வகையில் வயிறையும், மனசையும் ஒருசேர குளிர்வித்த "வள்ளல்" சுப்பிரமணியனை தங்கள் நெஞ்சங்களில் இறுதிவரை தூக்கி வைத்து மகிழ்வார்கள்!












Click it and Unblock the Notifications