எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு
கோவை: இறந்த என் குழந்தையை எனக்கே தெரியாமல் என் கணவர் வீட்டார் எரித்துவிட்டார்கள் என பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட கோவை 10 வயது சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கோவை சூலூரில் கொடூரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒரு கிராமத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தனது குழந்தையை தனக்கே தெரியாமல் எரித்துவிட்டதாக கணவர் வீட்டார் மீது தாய் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இறந்த என் குழந்தையை போஸ்ட் மார்டம் செய்த பிறகு என் கண்ணுல காட்டவே இல்லை.
எனக்கே தெரியாமல் பின் வாசல் வழியாக உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். என்னிடம் சொல்லாமலேயே கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டனர். எரிக்காமல் புதைத்திருந்தால் இறப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தோண்டு எடுத்து பார்த்திருக்க முடியும். ஆனால் இப்போது எனக்கே தெரியாமல் எரிச்சுட்டாங்க. எனது கணவர் மற்றும் அவரின் உடன் இருந்தவர்கள் மீது நான் குற்றம் சொல்கிறேன் என சிறுமியின் தாயார் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
கோவை சூலூரில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கடந்த 21 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சூலூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடத்திலிருந்து 100- க்கு போன் செய்து ஒரு புகார் சொல்லப்பட்டது. அதில் 10 வயது சிறுமியை மாலை 5 மணி முதல் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து குழந்தையை 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் நடந்தன. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளில் கிடைத்த ஆதாரத்தை வைத்து தேடினோம். இந்த நிலையில் குழந்தை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குளம் அருகே சடலமாக நேற்று முன் தினம் (22ஆம் தேதி) மாலை 6 மணிக்கு மீட்கப்பட்டது.
இதையடுத்து எங்களுக்கு கிடைத்த தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த நாகை மாவட்டம் கார்த்திக் (33) என்பவர் பதுங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது கார்த்திக் போலீஸிடம் இருந்து தப்ப மாடியில் இருந்து குதித்த போது வலது கை, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜையும் கைது செய்துள்ளோம்.
கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
விசாரணையில் குழந்தையை ஆசை வார்த்தை கூறி கார்த்தி என்பவர் அழைத்து சென்றுள்ளார். அவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகே கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் குடி வந்துள்ளார். கார்த்தியும் மோகன்ராஜும் கூலித் தொழிலாளர்கள். கார்த்திக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து இருக்கிறார். கார்த்தி போதை வஸ்துகள் ஏதும் பயன்படுத்தவில்லை.
குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்டு கைது செய்துள்ளோம், இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை கிடைக்க செய்வோம். குழந்தையை எப்படி கொன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரம்யா பாரதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications