வெள்ளியங்கிரி மலை ஆன்மிக பயணிகளுக்கு கட்டணம் இல்லை.. டிரெக்கிங் வேறு.. கோவை ஆட்சியர் விளக்கம்
கோவை: தமிழக அரசு மலையேற்ற திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையும் உள்ளது. இதற்காக ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் எதிர்வினையாற்றிய நிலையில், வெள்ளியங்கிரி ஆன்மிக பயணத்துக்கு எந்த கட்டணமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளார்.
தமிழக வனத்துறை சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு வனத்துறை மலையேற்ற திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை, நீலகிரி, தேனி, நெல்லி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பாதைகள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகுதி வாரியாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுடன் ரூ.5,099 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் வெளியிட்டிருந்த அறிவிப்பில்"வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ஆன்மிக பக்தர்கள் தான். அவர்கள் மலையேற்றத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அல்ல. மலையேற்ற திட்டம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசு அநியாயம் செய்கிறது.
வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களை தடுப்பதற்காக உதயநிதி திட்டம் தீட்டுகிறாரா. சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தான் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வெள்ளியங்கிரி மலை என்ன அவர்கள் குடும்ப சொத்தா.
இதற்கு முன்பு மலை ஏற எந்தக் கட்டணமும் இல்லை. இனி வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ரூ.5,000 செலுத்த வேண்டுமா. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது." என்று கூறியிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரபூர்வ அமைப்பான TN Fact Check எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இது முற்றிலும் திரிக்கப்பட்ட தகவல். கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதி மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் காப்பீடு,வழிகாட்டி, வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னேக்ஸ், 13 கி.மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்ப்ளட் உள்ளிட்டவை அடங்கும். இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை. ஆன்மிகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பாகவே இந்தப் பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ஆன்மிக பயணத்துக்கும், மலையேற்ற திட்டத்துக்கும் சம்மந்தம் இல்லை. ஆன்மிக பயண காலத்தில் மலையேற்ற முன்பதிவு நிறுத்தி வைக்கப்படும். ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications