ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் மிஸ்ஸிங்? கிளம்பிய குற்றச்சாட்டுகளுக்கு கோவை ஆட்சியர் பரபர விளக்கம்
கோவை: கோவையில் பல பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியர் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அமைதியான முறையிலேயே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

பரபர புகார்: இதற்கிடையே வாக்குப்பதிவு நடக்கும் போதே கோவையில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கோவை பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆட்சியர் விளக்கம்: இந்நிலையில், இது தொடர்பாகக் கோவை ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்குப் பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்டத் தேர்தல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்படும் போதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களைச் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் நடவடிக்கை: இப்பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவே வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையைத் தெரிவிக்க வழிவகை உள்ளது. இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, தொடர் நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக்கோரி, தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்குத் தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எளிய முறையில் வாக்காளர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் மூலமாகவும் பிரத்தியேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உரிய விதிகள்: எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின், அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்டத் தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications